Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Tuesday, 23 May 2017

அன்பர் தொண்டர் கடமையுரைத்து ஞானலோகம் படைத்திட அழைப்பு விடுக்கிறார் மகான் நாரதமுனிவர்

அரங்கனே கலியுக காப்பாளன், உண்மை குருநாதன், உலகாளும் ஞானவான், சற்குரு, சொற்குரு, ஞானகுரு 



சிவராஜ யோகியே அரங்கா போற்றி
சிவராஜ ஞானியே அரசா போற்றி
சிவராஜ மகா தவசியே போற்றி
சிவராஜ யோகம் வென்ற சித்தே போற்றி
அப்பனே அன்னதனால் மக்கள்
அறுமுகன் ஆளும் குடிலை
ஒப்பு கொண்டு வந்து வணங்கி
உயர் சேவை புரிதல் வேண்டும்
வேண்டியே ஆசான் புகழை
விரும்பி ஆசான் தொண்டர்கள்
தொண்டுபட உலகமெங்கும் பரப்பி
தெரிவிப்பேன் சேவைகள் புரிய
புரியவே ஆசான் பெருமைகள்
புரிய புரிய இந்த லோகமதும்
அறிவில் சிறந்து மெய் ஞானம்
ஆன்மீக வழி வந்து ஞானலோகம்
ஞானலோகம் ஆவது உறுதி
ஞானிகள் பல தேசமும் பெருகி
ஞானவான் அரங்கன் அருளால்
ஞானசபை பெருகுவது உறுதி
உறுதிபட ஆசான் வழி வரும்
ஒவ்வொருவரும் இனி பிறவா நிலை
கருதியே ஞானசித்தி பெறுவார்..


எங்கு பார்த்தாலும், போட்டி, பொறாமை, வஞ்சனை, சூழ்ச்சி, அராஜகம், அடக்குமுறை, கொள்ளை, களவு என்றே உலகெங்கும் தீய குணங்களே வெளிப்பட்டு அதனதன் தீய சக்திகளெல்லாம் மிகமிகப் பெருகி அமைதியற்ற சூழ்நிலை உலகெங்கும் பரவி மக்களெல்லாம் தடுமாறுகின்றனர். உலகமெலாம் ஒற்றுமையுடன் உலக சமாதானம் பெற்று உலகெங்கும் உயர்வான பண்புகள் பெற்று உலகெங்கும் ஞானம்பெருகி எங்கு பார்த்தாலும் அமைதியான சூழ்நிலை நிலவி மக்களெல்லாம் அமைதிபெற வேண்டியே ஆறுமுகனார் தாமே நேரினில் தோன்றி இவ்வுலகினில் நடக்கின்ற அராஜகங்கள், தீயசக்திகள், அநீதிகளையெல்லாம் அப்புறப்படுத்தி அமைதி ஏற்படுத்திடவே அவதரித்தார் அரங்கன் வடிவினிலே.


ஆறுமுகன் சக்தியாக அரங்கன் தோன்றியே ஞானஅரசாய் வெளிப்பட்டு அளவிலாத யோகமும் தவமும் செய்து வெற்றிகள் பெற்றதோடு உலகநலம் கருதியே தாம் பெற்றிட்ட தவயோக சக்திகளோடு உலகினை காத்திட ஆறுமுகன் அகத்தியரின் பெயரினாலே அளவிலாது உலகை காக்க தவமும் செய்தும் அரும்பெரும் தருமங்களையும் செய்து செய்து பிரம்மாண்டமான தர்ம, தவஆற்றலை உண்டாக்கினர்.


அதன் தொடர்ச்சியாகவே உலக நலம் கருதி உலக ஞானிகளெல்லாம் ஒன்று கூடியே உலகமாற்றம்தனை அற்புதமாய் நிகழ்த்திடவே சித்தர்கள் ஞானிகள் பெயரினிலே சித்தர்கள், ஞானிகளது அருளை உலகம் பெற்று கடைத்தேறிடவே சித்தர் ஞானிகள் விழாவாம் சித்தர் சிறப்பு பூசைகளை மாதந்தோறும் நடத்தி வருகின்றார்.


அவ்விதமே மாதங்கள் வருடங்கள் என பல கடந்து தொடர்ந்து விழா நடத்தி வருகின்றதனாலே விழா பயனாய் இவ்வுலகினில் மேலை நாடுகளும், கீழைநாடுகளும் என்றே உலகின் எல்லா தேசங்களும் தங்களுக்குள் உண்டான பகைமைகளெல்லாம் ஒழிந்து மனமாற்றம் ஏற்பட்டு நட்புடன் நடந்து உலகமே ஒன்றுபட்டு ஒற்றுமை ஏற்பட்டு இந்த பூமியே அமைதி காணுமப்பா.


ஆதலினால் மக்களெல்லாம் ஆறுமுகனார் அருளாட்சி புரிகின்ற உலகின் பொது ஞான மையமாம் துறையூர் ஓங்காரக்குடிலினை யுகமாற்ற கேந்திரமாகவும் யுகமாற்ற தலைவன் ஆறுமுகனார் திருஅருள் ஆலயமாகவும், ஞானிகள் ஞானசபையாகவும் எண்ணியே அவரவரும் குடில்தான் இவ்வுலகை மாற்ற வந்த திருக்கூட்ட மரபினர் கூடிட்ட திருவளர் ஞானாலயம் என்றே சந்தேகமின்றி மனதினில் ஐயங்கள் தெளிந்து ஒப்புக்கொண்டு மனம் மகிழ பயபக்தியுடன் குடிலிற்கு வருகைதந்து வணங்கி உலக மாற்றத்திற்கான தன் பங்காக பணிந்து பயபக்திபட தொண்டுகள் புரிந்திடல் வேண்டும்.


உத்தம மகாஞானி அரங்கன் குடிலை முழுமனதாக நம்பி வருகையுற்று உலகமாற்றம் வேண்டி தொண்டுகள் செய்திட செய்திட அவர்களெல்லாம் அவரவர் தம் பிரச்சனைகள் தீர்ந்து உண்மை ஞானமும் யோகமும் பற்றிய தெளிவான அறிவைப்பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றும் மார்க்கத்தை அறிவதோடு ஆற்றல்மிகு அரங்கமகா ஞானதேசிகர் தம் ஆற்றல்களை அவர்களெல்லாம் உணர்ந்திடுவர்.


உணர்ந்திட்ட அவரவரும் உணர்ந்த அரங்கன் பெருமைகளையும், ஞானிகள் பெருமைகளையும், சித்தர்கள் பெருமைகளையும், ஓங்காரக்குடிலின் தன்மையையும் அதன் பெருமைகளையும், ஜீவகாருண்யத்தின் தன்மை, ஆற்றல் பெருமைகள் என்றே உலக மக்களிடத்து கூறிகூறி இவையனைத்தும் ஒருங்கே பெற்றிட்ட அரங்கனை முன்னிறுத்தி அரங்கனே உலகை காக்க வந்திட்ட இரட்சகர் அவர்தாம் ஆறுமுகனின் அவதாரம் அவரே கலியுக இடர் நீக்க வந்திட்ட அவதாரபுருஷர். அவர்தாம் மக்களின் இடர் களைய வந்து உதித்திட்ட கலியுக காப்பாளன். அவரே கடைத்தேற்ற வல்லவர். அவரே துயர் துடைக்க உற்ற துணை. மக்களுக்கு அரங்கன் திருவடியே ஞானமளிக்கும். அரங்கன் உபதேசமே நன்னெறிப்படுத்தும்.


அரங்கர் காட்டும் பாதையே நம்மை நல்லோராக்கும் அரங்கனின் பாதுகாப்பே நமக்கு அறவேலி, அவர்தரும் காப்பே ஞானவேலியாம். அரங்கர்தம் துணையே நமக்கு இக்கலியுகத்தின் மிகஉயர்ந்த வரம் என்றெல்லாம் அன்பர்களும் தொண்டர்களும் அவரவரும் குடில் சார்ந்து தாம் பெற்ற அற்புதங்களையும் தாம் அரங்கனை வணங்கி பெற்றிட்ட மாற்றங்களுடன் இணைத்து உண்மையாக உள்ள உண்மைகளை அரங்கனின் புகழை அனைவரும் அறிய உரைத்து உலகோர் தம்மை தூயநெறியாம் அரங்க மார்க்கமதனில் வருகையுறச் செய்து அவர் தம்மையும் ஞானிகள் திருவடிக்கே ஆளாக்கி அவர்களை காத்து கலியுகத்தின் யுகமாற்றத்தின் பயனை அவர்கள் அடைந்து கடைத்தேறிடவே தொண்டர்களும் அன்பர்களும் தன்னலமற்று மனம் விரும்பி உள்ளமெல்லாம் அன்பு மேலோங்க உலகோர் தம் குற்றம் மறந்து அவர்தம்மை நல்லோர்களாக்கிட தியாகத்துடன் கூடிய சிறப்பான தொண்டினை அற்புதமாய் செய்திடல் வேண்டும்.


அன்பரும் தொண்டர்களும் உண்மையுடன் மனம் விரும்பி அரங்கர் பெருமைகளை உலகிற்கு அவர்கள் விரும்பி, பின்பற்றுகின்ற வண்ணமே அரங்க நெறிகளை சொல்ல சொல்ல உலக மக்களும் அரங்கர்தம் வழிக்கே வருகையுற்று ஞானியர் வழிபாடுகளை செய்வர்.


உலகெங்கும் அரங்கன் வழிபாடு கூடகூட வழிபாடு செய்கின்றோர் தமக்கு அரங்கனின் புகழ், அரங்கனின் பெருமை, அரங்கனின் ஆற்றல், அரங்கனின் வடிவம், அரங்கனின் தோற்றம், அரங்கனின் அற்புதங்கள், அரங்கனின் செயல்பாடுகள் என்றே அனைத்தும் புரிய புரிய, புரிந்த அந்த அரங்க பக்தர்கள் தமக்கு ஆறுமுகனை வணங்கினாலும் சரி, அகத்தியனை அவர்கள் வணங்கினாலும் சரி, இன்னும் முற்றுப்பெற்ற முனிவர்கள், ஞானிகள், சித்தர்கள் என்று யாதொருவரையும் பக்தி சிரத்தையோடு வணங்கினாலும் சரி, வணங்கினோர்க்கெல்லாம் இக்காலம் இனிவருங்காலம் என்றே எக்காலத்திலும் யுகமாற்ற தலைவன் அரங்கனின் தோற்ற தேகவடிவினிலே அவரவர் பக்தியின் திறத்திற்கேற்ப உடன் அவர் முன் ரூபமாய் அரங்கர் வடிவினிலேதான் எல்லா ஞானிகளும் தோன்றி அருளுவார்கள்.


ஆதலின் அரங்கமகாதேசிகனே இவ்வுலகின் அனைத்தும் அவர்தம் சிந்தையினிலே இருந்த இடத்திலிருந்தே அறிபவர் ஆவார். ஒரே சமயத்தினிலே உலகினில் ஆங்காங்கு அன்பர்தமக்கு காட்சி தருகின்ற அரங்கமகாதேசிகர் இனி எண்ணிறந்த ஆயிரம் ஆயிரம் இடங்களிலே அவர்தம் வடிவினிலே அரங்கர் தம்மை உலகின் அனைத்து மக்களும் ஒரே சமயத்தினிலே தரிசிக்கின்ற காலமும் வெகு விரைவினில் கூடி வருகுதப்பா.


அப்பப்பா அந்த காலத்தின் அற்புதங்களை எங்ஙனம் சொல்வோம் ஞானிகள் நாங்கள். அற்புதம் அற்புதம் இந்த பூவுலகமே அநீதி மறைந்து நீதி பெருகி அராஜகம் அழிந்து அமைதிபரவி, பொய் கபட வேடதாரிகளெல்லாம் தன்னிலை மாறி தவச்சான்றோர்கள் வசம் அடைக்கலமாகி தன்னிலைதனை மாற்றிக் கொள்ளவும், பண்புள்ளோர் பயமின்றி வாழும் சூழலும் உருவாகி உலகமே சொர்க்க லோகமாக மாறி உலகமே அறிவினில் சிறந்து மெய்ஞானம் பெருகி மக்களெல்லாம் மெய்ஞான வழிதனக்கு வருகையுற்று உண்மை  ஆன்மீகம்தனை வாழ்க்கை முறையாகக் கொண்டு உண்மை ஆன்மீக வழி நடந்து போலி ஆன்மீகம் ஒழிந்து உலகம் ஞானலோகமாகவே மாறி உலகெங்கும் ஞானமெனும் அருளொளி வீசி அற்புதமாய் ஜொலிக்க போகிறதப்பா.


இது கற்பனையல்ல. உலகமே ஞானலோகமாக மாறப்போவது உறுதி உறுதி. இது நாரதமுனியின் வாக்காகும் சந்தேகம் உறல் வேண்டாம். நம்புங்கள் மக்களே. ஞானிகள் எல்லாம் பல தேசங்களிலும் உருவாகி உலகெங்கும் ஞானிகள் பெருகி ஞானவான் ஞானயுகத்தலைவன் அரங்கன் அருளாலே இன்றுள்ள ஞானசபை இனிவரும் காலங்களிலே பெருகி பெருகி மிகப் பிரம்மாண்டமாவது உறுதி உறுதி இது நாரதன் வாக்கு.


ஆதலின் மனஉறுதியுடன் திட சித்தத்துடன் ஒவ்வொருவரும் அரங்கன் வழி வந்திடல் வேண்டும். அரங்கனே கலியுக காப்பாளன், உண்மை குருநாதன், உலகாளும் ஞானவான், சற்குரு, சொற்குரு, ஞானகுரு என்றே மனம் விரும்பியே ஏற்றுக்கொண்டு உறுதிபட அரங்கன் வழிதனிலே வருகையுறுகின்ற ஒவ்வொருவருக்கும் இனி பிறவா நிலைதனை பெற்றிடவே அவரவரும் தூயநெறி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டு அரங்கனருளால் ஞானசித்தியையும் பெறுவார்கள் என தமது ஞான சூட்சும நூல் மூலம் அன்பர் தொண்டர் கடமையுரைத்து ஞானலோகம்  படைத்திட அழைப்பு விடுக்கிறார் மகான் நாரதமுனிவர்.

-சுபம்-


     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






அகத்தியர் அருள் பெற்றாலன்றி கடைத்தேறுதல் ஆகாது!

அகத்தீசா என்றால் :


சாதாரண மனிதர்களாய் பிறந்த எண்ணற்றோர் அகத்தீசர் நாமத்தை சொல்லி சொல்லியே ஒன்பது கோடி ஞானிகளாக உருவாகிவிட்டனர். நாமும் அகத்தீசன் நாமத்தை சொல்லி ஞானம் பெற வேண்டும் என்பதை அறியலாம். உலகில் ஞானம் அடைய முயன்ற கோடனு கோடி மக்களில் முதன் முதலில் ஞானம் அடைந்தவர் ஆதிஞானத்தலைவன் முருகப்பெருமானே ஆவார்.

முருகப்பெருமான் ஞானம் அடைய மேற்கொண்ட அனைத்து யோக ஞானதவங்களுக்கெல்லாம் உற்ற துணையாய் இருந்து தன்னலமற்று தொண்டுகள் செய்து ஊன் உறக்கமின்றி தொடர்ந்து முருகப்பெருமானாருடன் இருந்து தவம் முடித்து முருகப்பெருமான் ஜோதி வடிவினனாகிட உதவியாய் இருந்திட்டார் மகான் அகத்திய பெருமானார்.


ஜோதி நிலை அடைந்த முருகப்பெருமான் தாம் அடைந்த அந்த பேரின்ப நிலையை தம் தவத்திற்கும் தமது வெற்றிக்கும் காரணமாயிருந்த அகத்தியருக்கு உபதேசித்திடவே தமிழ் மொழியை தோற்றுவித்து அதன் வழி ஞானக்கருத்துகளை உபதேசித்து அருளினன்.

ஞானோபதேசம் பெற்றிட்ட அகத்தியரை வாசியோடு வாசியாக முருகனே கலந்து நின்று அகத்தியரை ஞானியாக்கினன் முருகப்பெருமான். 

ஆயினும் ஞானியாகி முற்றுப்பெற்ற அகத்தியருக்கு கட்டளை பிறப்பித்தனன் முருகப்பெருமான் உலகம் கடைத்தேறவே. அகத்தியரை ஜோதிவடிவினான் ஆகாது தடுத்து, இவ்வுலகினில் பல காலம் தங்கி முருகன் நான் அடைந்த இந்த பேரின்பநிலையை, நீ அடைந்த பேரின்பநிலையை உலகோரும் அடைந்து கடைத்தேற்ற பாடுபட வேண்டும் என கட்டளையிட, ஆசானும் சீடனும் ஒன்றெனக் கலந்த அகத்தியரும் முருகனது கட்டளையை சிரமேற்கொண்டு நாடெங்கும் கால்தேய சுற்றி சுற்றி ஞானவழிதனை கல்லாத பாமரருக்கும் கற்பித்து கடைத்தேற்றி ஞானியாக்கினன் பெருங்கருணை கொண்ட மகாஞானி அகத்திய பெருமானார்.

ஞானவர்க்கத்தினிலேயே யாரொருவராலும் செய்ய முடியாத பெரும் தியாகமாகும் இச்செயல்.

ஞானமடைந்து தாம் ஞானியாகாமல் உலகோரையெல்லாம் ஞானியாக்கிவிட்டு ஆசான் முருகனின் கட்டளைக்கு காத்திருந்தார் மகான் அகத்தியர். இப்படி பல்லாயிரம் ஆண்டுகளாய் பாடுபட்டு பாடுபட்டு பல்லாயிரக்கணக்கான ஞானிகளை உருவாக்கினார் மகான் அகத்தியர்.ஆதலினாலே அகத்தியரால் தொடங்கி வைக்கப்பட்ட அந்த திருக்கூட்ட மரபினர் அகத்தியரின் அருட்பெருங்கருணையினால் ஒன்பது கோடி ஞானிகளுக்கு மேல் பரந்து விரிந்து எல்லையில்லா பெருந்திருக்கூட்டமாய் விளங்கி நிற்கின்றது.

என்ன! அகத்தியர் கருணை, என்ன! அகத்தியர் தயவு, என்ன! அகத்தியர் தாயன்பு, என்ன! அகத்தியர் பக்தி, என்ன! அகத்தியர் விசுவாசம், என்ன! அகத்தியரின் பணிவு அப்பப்பா சொல்லவும் முடியுமோ! அவரது அன்பை, அவரது ஆற்றலை, அவரது வல்லமையை, அவரது அருளை, அவரது தாய்மை குணத்தை.

அகத்தியரே திருக்கூட்ட மரபினரின் மூத்தோன், அவரே குருமுனிவன், அவரே சித்தர்கோன் என்பதை அறிந்து அகத்தியர் அருள் பெற்றாலன்றி கடைத்தேறுதல் ஆகாது என்பதை உணரலாம்.

Sunday, 14 May 2017

சித்தர்கள் வரலாறு பாகம் 2

முருகப்பெருமான் துணை

மகான் சுப்ரமணியர் ஆசிநூல் (04/09/2013)




பாரதநாடு பொருள் வளமும் புண்ணியபலமும் நிறைந்த நாடாகும். உலகைக்காத்து இரட்சிக்கும்படியான தூய்மையான பூசையாம் சித்தர்பூசைதனை சிறப்புற செய்து வருகின்ற கலியுக ஞானி அரங்கமகாதேசிகர் கார்த்திகை மைந்தனாகிய எம்மைக்கேட்க நானும் பெருமைமிகு சித்தர்கள் வரலாறுதனை நூல்மூலம் உரைக்கின்றேன்.



சித்தர்கள் வரலாற்றில் முதன்முதலாக நந்தி உபதேசம் அடைந்த திருமூலன் குறித்து கூறுகிறேன்.



நந்தி உபதேசம் பெற்று திருமந்திரம் எட்டாயிரம் பாடல்களை இக்கலியுக மக்களுக்காக இயற்றினார், மகான் திருமூலர். ஞானத்தொண்டுகள் பலசெய்த திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் தில்லையம்பதியாகிய சிதம்பரத்தில் ஜோதியானார்.


தமிழ் தலைவனாகிய எம்மிடம் தமிழைச் சிறப்புறக்கற்று தேர்ந்து உலகெலாம் தமிழ்வழியே ஞானம் பரப்பிய எமது அன்பு மைந்தன் அகத்தியர் மித்ரா வருணர் வர்க்கத்தில் தோன்றினார். தொண்டுகள் பலகோடி செய்து பலகோடி சித்தரிஷிகணங்களை தோற்றுவித்து எம்முடன் ஐக்கியமாகவே மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் கும்பகோணத்தில் ஜோதியானார்.


பல யுகங்கள் வாழும் சக்திபெற்ற யோகியும், மருத்துவம், இரசவாதம், சாஸ்திரங்களில் விற்பன்னரான மகான் பதஞ்சலி முனிவர் பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்து இராமேஸ்வரத்தில் முக்தியும், பிறிதொரு யுகத்தில் திருப்பட்டூரிலும் ஜோதியானார்.


உயர்ஞானம் அளித்திட்ட மகான் கமலமுனிவர் வைகாசி மாதம் பூசநட்சத்திரத்தில் முக்தி பெற்றார்.


குதம்பை அணிகலன் அணிய குதம்பை என பேர்பெற்ற குதம்பைச்சித்தர் அத்திமரபொந்திலிருந்து தவம்செய்து சமுதாயத்திற்கு நல்ஒழுக்கம் நல்விரதவழிமுறைகளை விளக்கி ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் மாயவரத்தில் சித்தி அடைந்தார்.


மச்சமுனிவரின் சீடரான மகான் கோரக்க மகரிஷி கோவை மாவட்டம் பேரூரில் கார்த்திகை மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் சித்தி அடைந்தார்.


மருத்துவத்தில் ஞானம்பெற்ற மகான் தன்வந்திரி பகவான் ஐப்பசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்து, வைத்தீஸ்வரன் கோவிலில் சித்தி பெற்றார்.


மகான் சுந்தரானந்தர் மதுரையில் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் சித்தி பெற்றார். இவரது உயர்ஞானக் கருத்துக்கள் மிகவும் உயர்ந்ததாகும்.


மகான் கொங்கணர், கொங்கு நாட்டில் யாதவர் குலத்தில் தோன்றி மகான் திருமூலரிடத்தும், போகரிடத்தும் சித்தியோகம் பயின்று சித்திரை மாதம் உத்திராட நட்சத்திரத்தில் திருப்பதியில் சித்தி பெற்றார்.


மகான் சட்டைமுனிவர், இலங்கையில் சிங்கள வகுப்பில் தோன்றியவர். இவர் சைவ, வைணவ பேதங்களைப் போக்கிட தெளிவான ஞானகருத்துக்களை கூறியவர். மக்களுக்கு பலவித தொண்டுகள் செய்து ஆவணி மாதம் மிருகசீரிட நட்சத்திரத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் முக்தி பெற்றார்.


மகான் வால்மீகி வேடர் குலத்தில் அவதரித்தவர். ஞானமளிக்கும் பல நூல்களை இயற்றிய மகரிஷி வால்மீகி, புரட்டாசி மாதம் அனுச நட்சத்திரத்தில் திருவையாற்றில் சித்தி பெற்றார்.


மகான் இராமதேவர் வைணவ குலத்தில் தோன்றியவர். இவர் மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் தென்மேருவாகிய மதுரை அழகர்மலையில் சித்தி பெற்றார்.


மகான் நந்தீசர் ஞானநூல்கள் பல இயற்றி இறுதியில் காசியில் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் முக்தி பெற்றார்.


மகான் இடைக்காடர் இடைக்காட்டூரில் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இடையர் குலத்தில் தோன்றினார். கணித, சோதிட, வான சாஸ்திர ஞானம் பெற்று இறுதியில் திருவண்ணாமலையில் முக்தி பெற்றார்.


மகான் மச்சமுனிவர் கோரக்கரின் குருநாதர் ஆவார். இவர் திருப்பரங்குன்றத்தில் ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார்.


மகான் போகர் விசுவகர்மா குலத்தில் தோன்றினார். பழனி மலையில் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் கருவூரார் கன்னர் குலத்தில் பிறந்தவர். சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் தோன்றினார். பாசுரங்கள் பல இயற்றி, பக்தி நெறிவழி செல்கின்ற இவருடைய ஆசான் மகான் போகமகரிஷி ஆவார். இவர் கரூர் மாவட்டம் கரூரில் சித்திபெற்றார்.


மகான் பாம்பாட்டிச்சித்தர் திருக்கோகர்ணத்தில் ஜோகி என்னும் பிரிவினில் தோன்றினார். மருதமலையில் முருகப்பெருமானின் அருளை பூரணமாகப் பெற்று, சங்கரன்கோவிலில் கார்த்திகை மாதத்தில் மிருகசீரிட
நட்சத்திரத்தில் சித்தி ஆனார்.


மகான் புலிப்பாணிச்சித்தர் வேடர் குலத்தில் தோன்றியவர். புரட்டாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினார். பழனிமலையில் முக்தி பெற்றார்.


மகான் புலத்தீசர் பாபநாசத்தில் ஆவணி மாதம் அனுச நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் தேரையர் பிரும்ம குலத்தில் தோன்றியவர். இவர் பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில் தோரணமலையில் சித்தி பெற்றார்.


மகான் சிவவாக்கியர் சங்கர குலத்தில் தோன்றியவர். இவர் தை மாதம் மக நட்சத்திரத்தில் தோன்றினார். மக்களுக்கு உபதேசங்கள் பல அளித்து, கும்பகோணத்தில் முக்தி பெற்றார்.


மகான் ரோமரிஷி மகான் புஜண்டமகரிஷியின் மைந்தராவார். ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் தோன்றினார். இவர் கைலாசத்தில் முக்தி பெற்றார்.


மகான் காகபுஜண்டர் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் தோன்றினார். பல யுகங்கள் வாழ்ந்த இவர், பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள உறையூரில் முக்தி பெற்றார்.


மகான் அழுகண்ணிச்சித்தர் அக்னி குலத்தில் பொன்பரப்பியில், புரட்டாசி மாதம் அனுச நட்சத்திரத்தில் தோன்றி, நாகப்பட்டினத்தில் சித்தி பெற்றார்.


மகான் நாரதர் பிரம்ம குலத்தில் புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் தோன்றினார். இவரது முக்தி தலம் திருவிடைமருதூரும், கருவை நல்லூரும் ஆகும்.


மகான் காசிப மகரிஷி பல யாத்திரைகளை செய்து ஞானம் பெற்று உலகமக்களுக்கு நன்மைகள் பல செய்து ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் ருத்ரகிரி மலையில் சித்தி பெற்றார்.


மகான் வரதரிஷி மார்கழி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் கேரள மாநிலம் தென்மலையில் ஞானசித்தி அடைந்தார்.


மகான் புண்ணாக்கீசர் கன்னடியர் குலத்தில் அவதரித்தார். வைகாசி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சென்னிமலையில் சித்தி பெற்றார்.


மகான் கண்ணிச்சித்தர் கன்னிகளாலான பாடல்களைப் பாடி இப்பெயர் பெற்றார். பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெருங்காவூரில் சித்தி பெற்றார்.


மகான் கடுவெளிச்சித்தர் ஆனந்த களிப்பு எனும் நூலை இயற்றியவர் ஆவார். இவர் தை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் முக்தி பெற்றார்.


மகான் விசுவாமித்திரர் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் காசி நகரில் சித்தி பெற்றார்.


மகான் கௌதமர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். திருவண்ணாமலை, திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் சமாதியானார்.


மகான் சுந்தரர் திருவாரூரில் முக்தி அடைந்தார்.


மகான் காலாங்கிநாதர் சித்திரை மாதம் அசுவினி நட்சத்திரத்தில் தோன்றி ஞானம் அடைந்து, திருப்பனந்தாள், திருக்கடவூரில் ஞானசித்தி அடைந்தார்.


மகான் அகப்பைச்சித்தர் ஆவணி மாதம் பூர நட்சத்திரத்தில் தோன்றி மனமாகிய பேயை வென்று திருவையாறில் ஞானசித்தி பெற்றார்.


மகான் பட்டினத்தார் வணிகர் குலத்தில் தோன்றினார். திருவொற்றியூரில் முக்தி பெற்றார்.


மகான் அத்திரி மகரிஷி பிரம்ம ஞானிகளுள் சிறந்த மகரிஷியாகிய இவர் ஆவணி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் கைலாயமலையின் அடிவாரத்தில் சித்தி பெற்றார்.


மகான் வசிஷ்டர் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் தோன்றினார். அஷ்டமா சித்திகளை அடைந்து மார்கழி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கயிலை மலையில் சித்தி அடைந்தார்.


மகான் வியாச முனிவர் நேபாளத்தில் ஆவணி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் தோன்றினார். மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் கயிலை மலையில் சித்தி பெற்றார்.


மகான் பிருகுமகரிஷி சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் தோன்றினார். மார்கழி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் முக்தி பெற்றார்.


மகான் அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் தோன்றினார். ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் முக்தி பெற்றார்.


மகான் சுந்தரானந்தர் மதுரையில் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் தோன்றினார். இவரை வல்லப சித்தர் எனவும் அழைப்பார்கள். ஆவணி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்தி பெற்றார்.


மகான் பிரம்மமுனிவர் பிரம்மரிஷி தேசத்தில் தோன்றினார். கோரக்கரும், பிரம்மமுனிவரும் இரட்டை சித்தர்கள் என்பார்கள். இவர் பங்குனி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் அவதரித்து, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் முக்தி பெற்றார்.


மகான் யூகி முனிவர், மகான் தேரையரின் மாணாக்கர் ஆவார். ஆவணி மாதம் பூச நட்சத்திரத்தில் தோன்றினார். ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார்.


மகான் அல்லமாபிரபு சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் தோன்றினார். ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் குருராஜர் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் தோன்றினார். ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார்.


மகான் திருநாவுக்கரசர் திருவுடையவூரில் தோன்றினார். திருப்புகலூரில் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் முக்தி பெற்றார்.


மகான் திருஞான சம்பந்தர் சீர்காழியில் தோன்றியவர். நல்லூரில் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார்.


மகான் கபிலர் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஊத்துமலையில் முக்தி அடைந்தார்.


மகான் குருதட்சணாமூர்த்தி ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் தோன்றியவர். திருவாரூர் மடப்புரத்தில் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார்.


மகான் யாகோபு ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் தோன்றியவர். கோவை மாவட்டம் பேரூரில் பங்குனி மாதம் பூராட நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார்.


மகான் இராமலிங்க சுவாமிகள் வடலூரில் தை மாதம் பூச நட்சத்திரத்தில் ஜோதியில் கலந்தார்.


மகான் கணபதி தாசர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் நாகப்பட்டினத்தில் முக்தி பெற்றார்.


மகான் பீர்முகமது ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் வியாக்ரமர் தை மாதம் பூச நட்சத்திரத்தில் பெரம்பலூர் மாவட்டம் திருப்பட்டூரில் முக்தி அடைந்தார்.


மகான் திருமாளிகைத்தேவர் ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவாடுதுறையில் முக்தி அடைந்தார்.


மகான் வரரிஷி கயிலையில் சித்திரை மாதம் அசுவனி நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் தாயுமானசுவாமிகள் இராமேஸ்வரம் அருகில் காட்டூரணியில் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் ஜோதி ஆனார்.


மகான் மார்க்கண்டேயர் ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கருவை நல்லூரில் முக்தி அடைந்தார்.


மகான் மிருகண்டரிஷி சதுரகிரியில் தவமியற்றி மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சதுரகிரியில் சித்தி பெற்றார்.


மகான் ஜமதக்கினி மகரிஷி ஐப்பசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் ஊத்துமலையில் சித்திபெற்றார்.


மகான் கஞ்சமலை சித்தர் கார்த்திகை மாதம் பூசம் நட்சத்திரத்தில் சேலம் அருகிலுள்ள கஞ்சமலையில் முக்தி பெற்றார்.


மகான் பத்ரகிரியார் பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவிடை மருதூரில் சித்தி பெற்றார்.


மகான் மௌனசித்தர் தை மாதம் சதய நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் ஞானசித்தர் பண்டரிபுரத்தில் அவதரித்தார். ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் வராகிமிகி ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சதுரகிரி மேல்மலையில் சித்தி பெற்றார்.


மகான் ஒளவையார் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் திருவள்ளுவர் தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் மயிலாப்பூரில் சித்தி பெற்றார்.


மகான் மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்தார். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் திருப்பெருந்துறையில் முக்தி பெற்றார்.


மகான் கணநாதர் சீர்காழியில் பிறந்தார். ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் சீர்காழி தோனியப்பர் சன்னதியில் சித்தி பெற்றார்.


மகான் வேதாந்த சித்தர் காஞ்சிபுரம் திருத்தண்காவில் பிறந்தார். கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் தூர்வாச முனிவர் துருவ தேசத்தில் பிறந்தவர். மார்கழி மாதம் பூராட நட்சத்திரத்தில் திருவண்ணாமலையில் சித்தி பெற்றார்.


மகான் கதம்ப மகரிஷி ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் அனுமன் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் மெய்கண்டதேவர் திருக்கோவிலூரில் அவதரித்தார். திருக்கோவிலூரில் கார்த்திகை மாதம் பூர நட்சத்திரம் முக்தி அடைந்தார்.


மகான் அருள்நந்தி சிவாச்சாரியார் புரட்டாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் திருத்தெலூரில் முக்தி பெற்றார்.


மகான் ஜனகர் தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் திருவல்லம் ஊரில் முக்தி பெற்றார்.


மகான் அசுவினித்தேவர் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் சதுரகிரியில் முக்தி பெற்றார்.


மகான் அம்பிகானந்தர் புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் இராமானந்தர் மார்கழி மாதம் பூராட நட்சத்திரத்தில் ஸ்ரீரங்கத்தில் முக்தி பெற்றார்.


மகான் உமாபதி சிவாச்சாரியார் சித்திரை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் சிதம்பரம் அருகில் அண்ணாமலைநகரில் சித்தி பெற்றார்.


மகான் கடைப்பிள்ளைச்சித்தர் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மேருமலையில் சித்தி பெற்றார்.


மகான் கண்ணானந்தர் தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் காளஹஸ்தியில் சித்தி பெற்றார்.


மகான் கல்லுளிச்சித்தர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் ஊத்துமலையில் முக்தி அடைந்தார்.


மகான் கலைக்கோட்டுச்சித்தர் மதுரையில் முக்தி அடைந்தார்.


மகான் கௌபாலச்சித்தர் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொங்கு நாட்டில் சித்தி பெற்றார்.


மகான் கணராமர் புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் காசியில் சித்தி பெற்றார்.


மகான் குகைநமச்சிவாயர் மாசி மாதம் ஆதிரை நட்சத்திரத்தில் திருவண்ணாமலையில் சித்தி பெற்றார்.


மகான் குறும்பைச்சித்தர் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் கொங்கு மலையில் சித்தி பெற்றார்.


மகான் கூர்மானந்தர் சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் பாண்டிய நாட்டில் சித்தி பெற்றார்.


மகான் கௌசிக முனிவர் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் திருவாடுதுறையில் சித்தி பெற்றார்.


மகான் சண்டிகேசர் தை மாதம் உத்திர நட்சத்திரத்தில் திருசேய்நல்லூரில் முக்தி பெற்றார்.


மகான் சத்யானந்தர் ஐப்பசி மாதம் பூச நட்சத்திரத்தில் விரிஞ்சியூரில் சித்தி பெற்றார்.


மகான் சங்கமுனிச்சித்தர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் கயிலையில் சித்தி பெற்றார்.


மகான் சங்கர மகரிஷி ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் சங்கிலிச்சித்தர் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் திருவொற்றியூரில் சித்தி அடைந்தார்.


மகான் சச்சிதானந்தர் தை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் கயிலையில் சித்தி பெற்றார்.


மகான் நந்தனார் ஆதனூரில் தோன்றினார். புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சிதம்பரத்தில் சித்தி பெற்றார்.


மகான் சிவயோக முனிவர் புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் கயிலையில் சித்தி பெற்றார்.


மகான் சிவானந்தர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் சதுரகிரியில் சித்தி பெற்றார்.


மகான் சுகப்பிரம்மர் மார்கழி மாதம் பூராட நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி அடைந்தார்.


மகான் சூத முனிவர் வைகாசி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் சதுரகிரியில் முக்தி பெற்றார்.


மகான் சூர்யானந்தர் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் வடதேசத்தில் முக்தி அடைந்தார்.


மகான் சூல முனிவர் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் இமயமலை சாரலில் முக்தி பெற்றார்.


மகான் சேது முனிவர் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொங்கு நாட்டில் சித்தி பெற்றார்.


மகான் சொரூபானந்தர் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் தில்லை என்கிற சிதம்பரத்தில் முக்தி பெற்றார்.


மகான் ஜம்பு மகரிஷி ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அயோத்தியில் சித்தி பெற்றார்.


மகான் ஜனந்தனர் புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் திருப்பதியில் சித்தி பெற்றார்.


மகான் ஜனாதனர் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் காளஹஸ்தியில் சித்தி பெற்றார்.


மகான் ஜனக்குமாரர் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் ஜெகநாதர் மார்கழி மாதம் பூராட நட்சத்திரத்தில் பூரி நகரில் சித்தி பெற்றார்.


மகான் ஜெயமுனிவர் தை மாதம் பூச நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் சித்தி பெற்றார்.


மகான் டமாரானந்தர் மார்கழி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கொங்கு நாட்டில் முக்தி பெற்றார்.


மகான் தானந்தர் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் நாகப்பட்டினத்தில் சித்தி பெற்றார்.


மகான் திரிகோணச்சித்தர் தை மாதம் திருவோண நட்சத்திரத்தில் இலங்கை திரிகோணமலையில் சித்தி பெற்றார்.


மகான் நாதாந்தசித்தர் புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் கயிலையில் சித்தி பெற்றார்.


மகான் நொண்டிச்சித்தர் ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொல்லிமலையில் சித்தி பெற்றார்.


மகான் பரத்துவாசர் மார்கழி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் பரமானந்தர் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் சித்தி பெற்றார்.


மகான் பராசரிஷி பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் சிதம்பரத்தில் முக்தி பெற்றார்.


மகான் பிங்கள முனிவர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் திருக்கச்சூரில் முக்தி அடைந்தார்.


மகான் பிடிநாகீசர் தை மாதம் பூராடம் நட்சத்திரத்தில் திருக்கச்சூரில் சித்தி பெற்றார்.


மகான் பூனைக்கண்ணார் ஆடி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பருவத மலையில் முக்தி அடைந்தார்.


மகான் மஸ்தான் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அரபு எல்லையில் முக்தி அடைந்தார்.


மகான் மயூரேசர் ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் சென்னிமலையில் சித்தி அடைந்தார்.


மகான் மாலாங்கன் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் ஊத்துமலையில் சித்தி பெற்றார்.


மகான் முத்தானந்தர் ஆடி மாதம் பூச நட்சத்திரத்தில் சிதம்பரத்தில் முக்தி பெற்றார்.


மகான் யோகச்சித்தர் ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் யோகானந்தர் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் விளையாட்டுச்சித்தர் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் வெள்ளியங்கிரி மலையில் முக்தி பெற்றார்.


மேற்கண்ட மகான்களின் வரலாற்றினை கலியுகஞானி அரங்கமகாதேசிகர் ஞானத்தலைவன் முருகப்பெருமானிடம் அறிவிக்க வேண்டி வேண்டுகோள் வைத்திட ஞானத்தலைவன் முருகப்பெருமானும் மனமிரங்கி அரங்கமகாதேசிகருக்கு ஞானிகள் வரலாறுகள்தனை அருளிச்செய்தார்.


ஞானவான் அரங்கரின் ஓங்காரக்குடில் எல்லா ஞானிகளின் ஆசியும், அருளையும் பெற்ற சபையாகும். எல்லா ஞானிகளும் இந்த ஓங்காரக்குடிலிற்கு ஆற்றல் பல அளித்து ஞான சபையென அறிவிக்கின்றோம். அத்தகு ஞான எல்லையில் ஞானிகளாகிய நாங்களெல்லாம் கலந்து அலங்கரித்து இவ்வுலகை ஆட்சி செய்கின்றோம். அவரரும் அந்த ஞான சபைக்கு வந்து கலந்து ஆசி பெற்றும் தேவாதி தேவர்களின் அருளையும் பெற்று உயர்வடைவீர்கள் என கூறுகிறார் மகான் சுப்ரமணியர் தமது அருட்சுவடி மூலம்.
....


     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html