முருகா! முருகா!! முருகா!!! என்றே முற்றிலும் உமது சிந்தை சொல் செயலெல்லாம் முருகனருளாய் கூடிட செபியுங்கள் முருகனே குருநாதனாய் வந்திடும் அற்புதம் காணுங்கள்.
Sunday, 26 August 2018
ஓம் அகத்தீசாய நம”
என்னுடைய பேர்ச்சொல்லில் கூட்டிக்கொண்டு
இசைவான பொதிகையிலே யேறுவார்பார்
உன்னுடைய திறங்கண்ட போதுதானே
யுறுதியுள்ள சித்தனென்று பேருமீய்வேன்
மின்னுடைய வொளிக்காட்டி யுறுதலமுங்காட்டி
மெய்ஞ்ஞான வீடுபெற நிலையுங்காட்டி
பன்னுடைய சிதம்பரமு மேருபூசைப்
பாவிப்போ மஷ்டாங்கம் பரிந்துகாணே.
-அகத்தியர் பூரண சூத்திரம் 216
ஆசான் அகத்தியர் சொல்கிறார் என்னுடைய நாமத்தை சொன்னால் பொதிகை மலையாகிய புருவமத்திக்கு செல்லமுடியும். உன்னுடைய திறமையை அறிந்த பின்புதான் உன்னை சித்தன் என்று சொல்வேன் என்கிறார். அகத்தீசன் நாமத்தை சொல்ல சொல்ல நாம் அறியமுடியாத ஒன்றை பற்றி அறிய நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதுவே வீடுபேறு அடையவும் உண்மை ஆன்மீகத்தை அறியவும் உதவுகிறது.
காலை எழும் போதே “ஓம் அகத்தீசாய நம” என்று அகத்தியர் நாமங்களை நாமஜெபமாக சொல்லிக் கொண்டே எழுந்திரித்தால் நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசிகளைப் பெற்று மனஅமைதியான வாழ்வை பெற்று, மனஅமைதியுடன் வாழ்வார்கள்.
ஞானிகள் நாமங்களை சொல்லி பூஜித்து ஆசி பெறுகின்ற மக்களுக்கு முருகனருளால் உணவு, உடை, தங்குமிடம் மற்றும் தகுதியுள்ள நட்பும் அமையப்பெற்று நலமான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம்.
பக்தியே பாலனாக்கும்
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
- திருமந்திரம் - திருமூலர் வரலாறு - கவி எண் 85.
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
- திருமந்திரம் - திருமூலர் வரலாறு - கவி எண் 85.
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று ஆசான் திருமூலதேவர் சொன்னார். ஆசான் ஞானபண்டிதன் வேறல்ல, மகான் அருணகிரிநாதர் வேறல்ல, எல்லாம் ஒருவர்தான். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் நான் அடைந்த இன்பத்தை இவ்வுலகம் அடைய வேண்டுமென்று சொன்னார்.
மறைபொருள் எது என்று கேட்டான்? அது, ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் என்றார் ஆசான் திருமூலதேவர். நீங்களெல்லாம் இந்த உடம்பைப் பற்றி அறிய முடியவில்லை. நான் அறிந்தேன் என்றார். இந்த உடம்புக்குள்ளேயே சொர்க்கம் இருக்கிறது. ஊன் என்ற இரண்டு சுழி ‘ன்’ போட்டிருக்கும். உடம்பு என்று அர்த்தம். அது ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்.
தான் பற்றப் பற்றத் தலைப்படுந் தானே என்றார். இப்ப நாங்களெல்லாம் அடைந்த இன்பம் எது? நீ பார்க்கக்கூடிய உடம்பை இதுநாள் வரை நீ நம்பியிருப்பாய், நம்பி போற்றி வருகிறாய். நாங்களும் போற்றி வருகிறோம். ஆனால் உன்னால் காப்பாற்ற முடியவில்லை. நரைதிரைக்கு உட்பட்டு, நோய்க்கும் பிரச்சனைக்கும் உட்பட்ட உடம்பாக இருக்கும். நாங்கள் என்ன செய்தோம்? உள்ளே ஒரு ஒளிச்சுடரை அறிந்து, நோய்க்கும், பிரச்சனைக்கும், பசிக்கும், பிணிக்கும் காரணமான உடம்பை நீக்கி, என்றும் அழியாத ஒளி உடம்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். இதை உங்களுக்கு சொல்கிறோம்.
நீங்களும் அறிந்து கொள்ளலாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இதுபற்றி ஒன்றுமே அறியாமல், வெறும் ஆரவார பூஜை சடங்குகளில் மட்டும் ஈடுபடுகிறீர்கள். முதுபெரும் தலைவன் சொன்னார். உன்னால் அறிந்து கொள்ள முடியாது. உன்னுடைய அறிவு ஒரு எல்லைக்கு உட்பட்டது. எங்கள் அறிவு எல்லை கடந்தது. ஈரேழு பதினான்கு உலகமும் சென்று வரக்கூடிய வல்லமை உள்ள அறிவு நாங்கள் பெற்றிருக்கிறோம். அந்த அறிவு எல்லாம்வல்ல இயற்கை எங்களுக்கு கொடுத்திருக்கிறாள். தாய்தான் தந்திருக்கிறாள். ஆகவே நீங்களும் அதை அறிந்து கொள்ளுங்கள் என்றார். ஞானிகள் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
என்னவே நீயழைக்க எனக்குமுன்னே
எதிரேறி முன்வருவாள் ஆத்தாள்வாலை
சொன்னபேர் அறிந்துநன்றாய் அழைத்துப்பாரு
சூட்சமிதை உனக்காகச் சொன்னோமப்பா
இன்னபேர் இன்னகுறி யெண்ணவேண்டாம்
ஏகமாய் அறிந்திருப்போம் அப்போநாமும்
முன்னமே அழைக்கையிலே மூமூவென்றால்
முத்திதரும் வாலைபதஞ் சித்தியாமே.
- மகான் திருமூலர் ஞானம் 84ல் கவி எண் 82
சித்தர்கள் எல்லோரும் ஞானிகள். ஞானிகளில் இவர் உயர்ந்தவர், அவர் தாழ்ந்தவர் என்ற பேதமில்லை. எல்லா ஞானிகளும் மானுட தேகம் எடுத்து அதன் பயனை அறிந்து அதிலுள்ள மும்மல கசடை நீக்கி ஒளி உடம்பை பெற்றவர்கள். களிம்பாகிய மும்மலத்தை போக்காவிட்டால் ஞானியாக முடியாது. அவர்கள் பலகோடி யுகம் வாழும் வல்லமை பெற்றவர்கள். மனிதனாக பிறந்தால் மோட்ஷகதி அடைய வேண்டும். நம்மை தோற்றுவித்த வாலை அன்னை எப்பவும் இளமையாக இருக்கிறாள். நாம் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு இறந்து விடுகிறோம். ஞானிகள் அருள் இல்லாமல் இயற்கை அன்னையை அறிய முடியாது. ஆசான் திருமூலதேவரை தியானித்து அழைக்கவேண்டும் இல்லாவிட்டால் ஒரு முற்றுப்பெற்ற ஞானியை ஆசானாக ஏற்று பூஜித்து ஆசி பெற வேண்டும்.
இருள்சேர் இருவினை சேராமல் காக்கும் இறைவனே வள்ளுவபெருமான்
திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் அவர்கள் அருளிய அருளுரை
திருக்குறள் கடவுளால் செய்யப்பட்டது. மற்ற நூல்களிலும் அறத்தைப் பற்றியும், பொருளைப் பற்றியும், இன்பத்தைப் பற்றியும் பேசுவார்கள். இன்பம் என்பது ஆணும் பெண்ணும் கூடி வாழ்கின்ற வாழ்க்கை. அது இல்லறமாகும். உலக அறிஞர்கள் எல்லோரும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும், இனிமையாக பேச வேண்டுமென்று சொல்வார்கள்.
வீடுபேறு என்றால் மரணமிலா பெருவாழ்வு அல்லது மோட்சலாபம். மனிதனுக்கு மரணமிலா பெருவாழ்வு உண்டு என்பதை அறிந்தவர்கள் நமது ஞானிகள். மகான் இராமலிங்க சுவாமிகள் முதற்கொண்டு ஆசான் அருணகிரிநாதர் வரை மரணமிலா பெருவாழ்வு என்ற வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.
விஞ்ஞானமும், மெய்ஞானமும் இரண்டு கண்கள் போன்றது. ஒன்றை ஒன்று அவமதிக்கக்கூடாது. இதற்கும் அதற்கும் பகையில்லை, நட்புதான்.இந்த விஞ்ஞானம் உடம்பைப் பற்றி அறிகின்ற அறிவாகும். உடம்புக்கு நோய் வந்தால் விஞ்ஞானத்தால் குணமாக்கலாம் என்று சொல்லலாம். நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கலாம். ஆனால் இந்த விஞ்ஞானம் உடம்பை காப்பாற்ற மட்டும்தான் பயன்படும்.
விஞ்ஞானத்தால் தயாரிக்கப்பட்ட கருவிகளும், மருந்துகளும் மனிதவர்க்கத்துக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம்தான். ஆனால் அது மனிதன் மட்டுமே அடையக்கூடிய மோட்ச லாபத்தை தர வேண்டுமல்லவா?
மோட்ச லாபம் என்பது உடம்புக்குள்ளே சூட்சுமதேகம் அல்லது ஒளி உடம்பு என்ற ஒன்று இருக்கிறது. அந்த ஒளி உடம்பைப் பற்றி அறியணும். ஒளியுடம்பை அறிவதற்கு பக்தி ஒன்றுதான் வழி. ஒளி உடம்பை பெற்றவர்கள் அதை வீடுபேறு, மோட்சலாபம், முக்தி அல்லது முக்திநெறி என்று சொல்லுவார்கள். அதைப்பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்த ஒளிஉடம்பை பெற்றவர்களிடம் பக்தி செலுத்தணும், அவர்களிடம் அன்பு செலுத்தணும் என்பார்கள்.
பக்தி எதற்கு செலுத்த வேண்டும்? மோட்சலாபம் அடைவதற்கு. மோட்சம் அல்லது வீடுபேறு அல்லது முக்திநெறி அடையவேண்டுமென்றால் பக்தி செலுத்தணும். பக்தியை யாரிடம் செலுத்துவது?
நாம் செலுத்துகின்ற பக்தியெல்லாம் ஒரு வகையில் சிறுதெய்வ வழிபாட்டில் போகும். அவரவர்கள் அறிவுக்கு ஏற்ற மாதிரி பக்தி செலுத்துவார்கள். ஞானிகளெல்லாம், முற்றுப் பெற்றவனாகவும், எவன் மரணமிலா பெருவாழ்வு பெற்றானோ, எவன் எக்காலத்தும் அழியாது இருக்கிறானோ அவனுடைய ஆசி பெறுவதற்காக ஞானிகள் பக்தி செலுத்துவார்கள். அவர்களுடைய ஆசியை பெறணும்.
ஆசான் திருவள்ளுவர் முற்றுப்பெற்ற முனிவர். மரணமிலா பெருவாழ்வு பெற்றவர். அவர் எழுதிய நூல்கள் பிசிறு இல்லாமல் தெளிவாக இருக்கும். எந்த காலத்துக்கும் பொருந்தும். இந்த காலத்துக்குத்தான் பொருந்தும், இந்த காலத்திற்கு பொருந்தாது என்று சொல்ல முடியாது. எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடிய நூலை எழுதியிருக்கிறார். என்ன காரணம் என்றால் அவர் வீடுபேறு அறிந்தவர், மரணமிலா பெருவாழ்வு பெற்றவர், அறியாமை நீங்கியவர். அறியாமை நீங்கியதால்தான் அப்படிப்பட்ட நூலை அவரால் எழுத முடிந்தது. அறம், பொருள், இன்பத்தைப் பற்றி எழுதியிருக்கிறார், வீடு பேறைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
மகான் திருவள்ளுவபெருமான் பிறவிக்கு காரணமானதை அறிந்தவர். பிறவிக்கு என்ன காரணம்? இந்த மும்மலமாகிய தேகம்தான் காரணம். அறியாமையை உண்டு பண்ணக்கூடிய இந்த தேகத்தை நீக்கினால் மரணமிலா பெருவாழ்வைப் பெறலாமென்ற இரகசியத்தை அறிந்தவர் ஆசான் திருவள்ளுவர்.
எனவேதான் எக்காலத்திலும், எந்த சக்தியாலும், எந்த விஞ்ஞானியாலும், எந்த அறிஞராலும் புறக்கணிக்க முடியாததாகவும், இது தேவையில்லை என்று சொல்லக்கூடிய நூலை அவர் எழுதவில்லை. 1330 குறளும் அப்பேர்ப்பட்ட முதுபெரும் தலைவனால் எழுதப்பட்டது. அவர் பிறவி நீங்கியவர் பிறவிக்கு காரணமாகிய பேதைமையை நீக்கினவர்.
ஆக இந்த தேகத்தை அறிந்து அதிலுள்ள மாசை நீக்க வேண்டும். இந்த தேகத்தில் இருக்கும் அழுக்கு, மாசு அல்லது மும்மலக்குற்றம் என்று சொல்லப்பட்ட ஆணவம், கன்மம், மாயை அல்லது மல, ஜல, சுக்கிலம் என்ற இந்த கசடை நீக்கியதால்தான் அவன் இனி பிறக்க மாட்டான். அவனே பேதைமை நீங்கியவன்.
Wednesday, 22 August 2018
திருக்குறள் அமைச்சு என்ற அதிகாரத்திற்கு வழங்கிய அருளுரை
திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் அவர்கள் வழங்கிய அருளுரை
மனம் என்ற மன்னன், மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட புலன்கள் வழியே செல்லுகிறான். அறிவு என்ற அமைச்சன் மனம் என்ற மன்னனைப் பார்த்து, “மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட திருடர்கள், கயவர்கள், வேடர்கள் இவர்களின் பேச்சைக்கேட்டு நீ அவர்களின் போக்கில் போகாதே” என்று அறிவு என்ற அமைச்சன் சொன்னாலும், மனம் என்ற மன்னன் கேட்க மாட்டான்.
மனம் என்ற மன்னன் பொறி, புலன் வழியே செல்கிறான், அங்கு அறிவுரை எடுபடவில்லை. பொறி ஐந்து, புலன் ஐந்து ஆகும். கண் என்பது ஒரு பொறி. கண்களில் பார்த்து ஒரு பொருள் புலப்பட்டால் அது புலன். செவி என்பது பொறி. ஒரு செய்தியை, செவியால் சேகரிக்கப்பட்டு அதைப்பற்றி சிந்தித்தால் அது புலன். நாவு என்பது கருவி. சாப்பிட்ட பொருள்களின் சுவையை அறிந்தால் அது புலன். மூக்கு என்பது பொறி. மகிழம்பூ வாசனை, நெய் வாசனை, தக்காளிசாத வாசனை, சோம்பு வாசனை என வாசனைகளை இனம்பிரித்து காட்டும். இது புலன். மெய் என்பது உடம்பு. குளிர்ச்சியாகவும் வெப்பமாகவும் உள்ளதை உடம்பின் மூலமாக தொடு உணர்ச்சியால் அறியும் அனுபவத்தை புலன் என்று சொல்வார்கள்.
மனம் என்று சொல்லப்பட்ட மன்னன், அறிவு என்ற அமைச்சன் சொல்லுகின்ற கருத்தை கேட்காமல், பொறிபுலன் வழியே செல்கிறான். ஆக இவர்கள் இரண்டுபேரும் இப்படி முரண்பட்டு இருக்கிறார்கள். ஆக, மனது என்ற மன்னன், அறிவு என்று சொல்லப்பட்ட அமைச்சன் பேச்சை கேட்கவேண்டும்.
மனது என்ற மன்னன், புலன் வழியே செல்கிறான். புலன் வழியே, மனம் என்னும் மன்னன் செல்வதால், அங்கே ஒரு நெறி இருக்காது. புலன்களை நெறிப்படுத்த முடியாது. மனம்தான் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். புலன் வழியே மனம் என்ற மன்னனும், அறிவு என்ற அமைச்சனும் செல்வதால், அங்கே ஒரு நெறி இருக்காது.
இப்படி இருக்கும்போது உடம்பு என்று சொல்லப்பட்ட அரண்மனையை அல்லது கோட்டையை எப்படி இவர்களால் காப்பாற்ற முடியும்? இப்படிப்பட்ட ஒரு நிலையில் உடம்பு என்று சொல்லப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியிலே ஒரு சத்தம் கேட்குது. இந்த ஆன்மாவுக்குரிய பலகோடி வினைகள் காரணமாக பலகோடி ஜென்மங்கள் எடுத்திருக்கு. பலகோடி ஜென்மங்களாக ஒவ்வொரு உடம்பிலும் ஆன்மா தங்குவதும், அதனால் உடம்பும் உயிரும் சேர்ந்து செய்கிறபாவம் உயிரைச் சார்ந்து விட்டது. இது மனம் என்கிற மன்னனுக்கும், அறிவு என்ற அமைச்சனுக்கும் தெரியாது.
தனி உடம்பு பாவம் செய்யாது. உயிரும் உடம்பும் செய்யக்கூடிய பாவம், உடம்புக்கு நலிவு வந்து, நோய் வந்து உடம்பு இறந்துவிடும். ஆனால் உயிருக்கு நலிவு இல்லை, நோயில்லை, பரிணாம வளர்ச்சி இல்லை. ஆனால் செய்த வினையை மட்டும் உயிர் வாங்கி வச்சுக்கும். இப்படி பலகோடி ஜென்மங்களில் பலகோடி உடம்பெடுத்து பாவம் செய்ததினாலே ஆன்மா நலிவுற்றுக் கிடக்கு. அதற்கு ஒரு வீர உணர்ச்சி இல்லை, தெம்பில்லை, நோய்வாய்ப்பட்டு கிடக்கு.
ஆன்மா, “நீங்க ரெண்டு பேரும் என்னை கவனிக்கவே இல்லை. நான் இந்த உடம்பிற்கு வந்து நாற்பத்தைந்து வருஷம் ஆச்சு. நாற்பத்தைந்து ஆண்டுகளாக என்னை நீங்க கவனிக்கல. அதனால நான் நலிந்து இருக்கிறேன்” என்று இப்படி ஆன்மா, மனதையும் அறிவையும் பார்த்து சொல்லுது. மனம் என்ற மன்னன் அறிவு என்ற அமைச்சனைப் பார்த்து “இவருக்கு (நலிந்த ஆன்மா) என்ன செஞ்சா சரியா வரும்? என்ன வைத்தியம் செய்றது?” என்று கேட்டான்.
அதற்கு அந்த நலிந்த ஆன்மா “எனக்கு உங்களால் எதுவும் கொடுக்க முடியாது. என்னால் எதுவும் சாப்பிட முடியாது. எனக்கு அருளும், புண்ணியமும்தான் வேணும். நான் சாப்பிடும் உணவு அருளும், புண்ணியமும்தான். புண்ணியமும், அருளும் இருந்து கொடுத்தீங்கன்னா ரொம்ப தெம்பா இருப்பேன்” என்று ஆன்மா, மனம் என்ற மன்னனையும், அறிவு என்ற அமைச்சனையும் பார்த்து சொன்னது.
மனம் என்ற மன்னன், “நம்மிடம் உள்ள வசதிக்கு நாம என்ன புண்ணியம் செய்ய முடியும்” என்று அறிவு என்ற அமைச்சரிடம் கேட்கிறான். அதற்கு அறிவு என்ற அமைச்சன், “இப்ப இருக்கிற மூலதனத்தைக் கொண்டு நாம எந்த புண்ணியத்தையும் செய்ய முடியாது” என்று சொல்லுகிறான். “இருக்கக்கூடிய பொருளைக் கொண்டு புண்ணியத்தை செய்து ஆன்மாவுக்கு உணவு தருவோம். புண்ணியமும் அருள் பலமும்தான் ஆன்மாவுக்கு உணவு. அருள்பலம் ஆன்மாவுக்கு நல்ல உணர்ச்சியைத் தரும். அந்த அருளை எப்படி சேகரிப்பது என்று” மனம் என்னும் மன்னன், அறிவு என்ற அமைச்சனைப் பார்த்து கேட்கிறான்.
அப்ப ஒரு சத்தம் வருகிறது “என் திருவடியைப் பற்றுங்கள்” என்று உள்ளே இருந்து ஒரு சத்தம் வருகிறது. “அறிவு என்ற அமைச்சனும், மனம் என்ற மன்னனும், ஆன்மாவும் இருக்கும்போது, என் திருவடியைப் பற்றுங்கள் என்று உள்ளே ஒரு ஓசை கேட்கின்றது” இந்த மூவரும் இவ்வாறு சொல்வது யார்? என்று பார்க்கும்போது அகத்திய முனிவர் இவர்களைப் பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்.
“அருள் பெறுவதற்கு வேறு இடம் தேவை இல்லை. என் திருவடியைப் பற்றுங்கள்” என்றார் அகத்திய முனிவர். மன்னன் என்ற மனம், அன்னதானம் செய்தது, அகத்தீசன் திருவடியை பூஜை செய்தது. இருவரும் சேர்ந்து கொண்டார்கள்.
பிறகு அறிவுக்கும், மனதிற்கும், ஆன்மாவுக்கும் அகத்தீசர் போதிக்கிறார். அன்னதானம் செய்வது நல்லதுதான் என்று கூறி, மேலும் “என் திருவடியைப் பற்றுங்கள். என் திருவடியைப் பற்றினால் உங்களுக்கு நான் அருள் செய்வேன்” என்றார்.
“ஆன்மா நலிந்துவிட்டால், ஆன்மா கோட்டையை (உடம்பை) விட்டு போய்விட்டால், ஆன்மா இல்லாத உடம்பிற்குள், மன்னனாகிய உனக்கும் (மனம்) வேலையில்லை. அமைச்சனாகிய அறிவுக்கும் வேலை இல்லை. ஆசானாகிய எனக்கும் இங்கு வேலை இல்லை” என்றார்.
இதைக்கேட்ட மனம் என்ற மன்னன், ஆசான் அகத்தீசரை பூஜை செய்கிறார். மகான் அகத்தீசரை பூஜை செய்யசெய்ய, அறிவு என்று சொல்லப்பட்ட அமைச்சன் தெளிவு அடைகிறான். இருவரும் பூஜை செய்கிறார்கள். மனம் என்று சொல்லப்பட்ட மன்னனும், அறிவு என்று சொல்லப்பட்ட அமைச்சனும் சேர்ந்து ஆசான் திருவடியைப் பூஜை செய்கிறார்கள்.
மனமும் அறிவும் சேர்ந்து, ஆசான் திருவடியை பூஜை செய்கிறார்கள். பூஜை செய்ய பூஜை செய்ய அறிவும் மனமும் சிறப்படையும், ஆன்மாவும் ஆக்கம் பெற்றது. ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஒருவர் எடுத்துச் சொல்ல வேண்டும். மனம் என்ற மன்னன் மடையனாக இருந்தால், அறிவு என்ற அமைச்சனால் ஒன்றும் சொல்ல முடியாது.
மன்னனின் (மனதின்) லோபித்தனத்தைக் கண்டு அமைச்சர்(அறிவு) வருந்துவார். ஆக ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆன்மா நலிவடைந்தால் இந்தக் கூட்டைவிட்டு போய்விடும். கூட்டை விட்டு போகும் முன்னே “கூடலி முன்னே கதி கொள்ள வேண்டும்” என்பார்.
இந்த உடம்பு அழிவதற்கு முன்னே ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆன்மாவுக்கு ஆக்கம் தேடுவதற்கு அன்னதானம்தான் செய்ய வேண்டும். அன்னதானம் செய்வதற்கு அறிவு வேண்டும். ஆசான் அகத்தீசரை பூஜை செய்தால், பொல்லாத வறுமை தீரும், செல்வம் பெருகும். அதேசமயம் அருளையும் தருவார். அருள் பெருகினால் அறிவு சிறப்பாக வேலை செய்யும், லோபித்தனம் இருக்காது, சீலமும் பெருகும்.
ஒவ்வொருவருடைய உடம்பு என்ற கோட்டையில் மனம் என்ற மன்னன் இருக்கிறான், அறிவு என்ற அமைச்சன் இருக்கிறான். ஆன்மாவும் இருக்கு. மூவரும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். ஞானிகளை வணங்கினால் நமக்கு உணர்த்துவார்கள்.
இப்ப நாம அகத்தீசாய நம, அகத்தீசாய நம, அகத்தீசாய நம என்று சொல்லுகிறோம். தினமும் அகத்தீசனை வணங்குங்கள், அகத்தீசனை வணங்குங்கள் என்று பேசுறோம். ஏனயா வணங்கனும்? என்று கேட்டால் ஆன்மா நலிந்து கிடக்கு. ஆன்மா நலிந்தால் இந்த கோட்டையிலே (உடம்பிலே) நீடித்து இருக்க முடியாது. இந்தக் கோட்டையை காப்பாற்ற வேண்டும். அதற்கு ஆன்மா, ஆக்கம் பெற வேண்டும். அதுக்குத்தான் அகத்தீசனை வணங்க சொல்றோம்.
ஆன்மா ஆக்கம் பெறாமல், உடம்பு மட்டும் ஆக்கம் பெற்று என்ன பயன்? இந்த உடம்பு நல்ல திடமாக இருக்கும்போது ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆன்மா உரம்பெற்று இருக்க வேண்டும்.
ஆன்மா பலகோடி ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. ஆனால் உடம்போ அவரவருக்கும் முப்பது வருஷம், நாற்பது வருஷம், ஐம்பது வருஷம், அறுபது வருஷம், எழுபது வருஷம், எண்பது வருஷம் போல ஒரு குறுகிய காலத்தில் வந்தது இந்த உடம்பு. ஆக குறுகிய காலத்தில் வந்த, இந்த உடம்பு இருக்கும்போதே உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டுமென்ற அறிவுரையை ஒருவர் சொல்ல வேண்டும்.
இயல்பாக எதையும் அறிவுக்கு உணர்த்த முடியாது. நல்வினை இருந்தால், ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டுமென்று அறிவுக்கு யாரேனும் ஒருவர் உபதேசிப்பார்கள். ஆன்மலாபத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ளுங்கள். இதற்கு என்ன உபாயம் என்றால், முற்றுப்பெற்றவன் திருவடியை பூஜை செய்ய வேண்டும். அடுத்ததாக ஏழைஎளிய மக்களுக்கு பசியாற்ற வேண்டும். இதுபோன்ற செயல்களால்தான் ஆன்மா ஆக்கம் பெறும். ஆன்மா ஆக்கம் பெற்றால் அறிவு வேலை செய்யும். மனமென்ற மன்னனும் தெளிவடைவான். இதையே மகான் திருவள்ளுவர்,
ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
- திருக்குறள் - புகழ் - குறள் எண் 231.
ஈதல் - கொடுத்தல், இசைபட வாழ்தல் - புகழ்பட வாழ்தல். ஊதியம் - அன்னதானம் செய்வதால் ஆன்மாவுக்கு ஊதியம் வரும், புகழும் உண்டாகும். ஆன்மாவுக்கு ஆன்ம இலாபம் உண்டாகும்.
ஆன்மாவுக்கு ஆக்கம் வரும். அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு - உயிர்க்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும்.
ஏன் உயிர்க்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். உடல்மாசு காரணமாக உயிர்மாசுபட்டு இருக்கு. இந்த காமதேகத்தின் காரணமாக இந்த தேகத்தில் உள்ள உயிருக்கும் மாசு இருக்கும். உயிருக்கு மாசு வந்தால் அறிவு மங்கிவிடும். மனம் தெளிவடையாது. ஞானிகள்மீது செலுத்தும் பக்தியாலும், தானதவம் செய்வதாலும் உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ளலாம்.
இந்த உயிர் ஆக்கம் பெறபெற மனம் என்ற மன்னனும், அறிவு என்ற அமைச்சனும் தெளிவடைவார்கள். இதனால், ஆன்மா தெளிவு அடையஅடைய உடம்பைப்பற்றிய உணர்வு வரும். உடம்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும், உடம்பை காப்பாற்றிக் கொள்வது நல்லது என்ற உணர்வு வரும். அப்ப உடம்பை எப்படி காப்பாற்றிக் கொள்வது? அசைவ உணவு கொடுத்து உடம்பை காப்பாற்றிக் கொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது.
உடம்புக்கு சைவ உணவைக் கொடுத்து காப்பாற்ற வேண்டும். உடம்பு இருக்கும்போதே உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும், என்ற எச்சரிக்கை உணர்வு வரும். உயிர் என்பது மூச்சுக்காற்று இயக்கம். மூச்சுக்காற்று வந்து போய்கிட்டு இருக்கும். உடம்பு என்ற கோட்டை அல்லது அரண்மனை, திடமாக இருந்தால்தான் மூச்சுக்காற்று இயல்பாக வந்துபோகும். உடம்பு என்ற கோட்டை நலிந்தால் நிச்சயமாக வந்து போகின்ற காற்று நின்றுவிடும். வந்து போகின்ற காற்று நின்றுவிட்டால், ஆன்மா உடம்பை விட்டு பிரிந்துவிடும்.
ஆன்மா மாசுபட்டால், ஆன்மா நலிந்தால், ஆன்மா மெலிந்தால், அறிவு மாசுபட்டுவிடும், அறிவு மங்கிவிடும். மனமும் தெளிவடையாது. ஆன்மாவிற்கு ஆக்கம் தருவது பக்தியும், புண்ணியமும்தான். அதை விரைவாக செய்து கொள்ள வேண்டும் என்பது ஞானிகளின் கருத்து. நேற்று நல்லபடியாக இருந்த ஒருவன், இன்று இல்லை. இப்படித்தான் வாழ்க்கை அமைந்துள்ளது என்பார் ஆசான் திருவள்ளுவர். இதை,
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 336.
என்பார்.
நெருநல் உளன் ஒருவன் - நேற்று நல்லபடியாக உள்ள ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்தது இவ்வுலகம். நேற்று நல்லபடியா, திடகாத்திரமாக இருந்தார், இன்று இல்லை, என்று ஒருமாசம் இரண்டு மாசம் பேசுவார்கள். அப்புறம் மறந்தே விடுவார்கள்.
இப்படி கோடானுகோடி மக்கள் பிறப்பார்கள், இறப்பார்கள். புகழ் வாய்ந்தவர்கள் என்றால், அவர்களின் புகழ் பத்து வருஷங்களுக்கு இருக்கும். சிலபேருக்கு நூறு வருஷங்கள் வரைக்கும் அவரோட புகழ் இருக்கலாம். இதை ஆசான் திருவள்ளுவர்,
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
- திருக்குறள் - புகழ் - குறள் எண் 234.
உலகமெல்லாம் புகழ்பட ஒருவர் வாழ்ந்தால், அவர்கள்தான் பெருமைக்கு உரியவர்களாக இருப்பார்கள். நிலையில்லாத வாழ்க்கையை பெற்றிருக்கிறோம். அதற்குள் நிலையான காரியங்களை செய்துகொள்ள வேண்டும், என்பார் ஆசான் திருவள்ளுவர். பத்தாம் வாசலாகிய புருவமத்தியில் அந்தக்கல்லை வைத்து வழியை அடைக்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு ஞானிகள்தான் அருள்செய்ய வேண்டும். மேலும் ஆசான் திருவள்ளுவர்,
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 335.
நாச்செற்று - நாவடங்கி, விக்குள்மேல் - சிலருக்கு ஆன்மா பிரியும்போது விக்கல் வரும். மூலாதாரத்திலிருந்து அந்த ஆவி பிரியும்போது விக்கல் வரும். எந்த மனிதனும் நான் இத்தனை ஆண்டுகள் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நம்மை நோக்கி எமன் வந்துகொண்டே இருக்கிறான்.
அறியாமையாகவும், வறுமையாகவும், பகையாகவும், பல்வேறு பிரச்சனைகளாகவும் எமன் வருகிறான்.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட புலன்களும் நமக்கு பகைவன்தான். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று சொல்லப்பட்ட கரணங்களும் நமக்கு பகைவன்தான். பொறி ஐந்து, புலன் ஐந்து, கரணம் நான்கு ஆக கருவிகள் பதினான்கு. தத்துவம் தொண்ணூற்றாறில் இந்த பதினான்கு கருவிகள்தான் முக்கியம். எழுபத்தீராயிரம் நாடிநரம்புகளில் பத்து நாடி முக்கியமானது. அந்த பத்து நாடியிலும் ஒரு நாடிதான் மிக முக்கியமானது என்று, ஒளவையார் கூறுவார்.
இந்த பதினான்கு கருவிகளும் நமக்கு எமனாக உள்ளது. தத்துவங்களெல்லாம் நம்முடன் ஒத்துழைக்காது. தேகம் காமதேகம் என்பதாலும், தேகத்தில் கசடு உள்ளதாலும், பொறிபுலன்கள் நம்மோடு ஒத்துழைக்கவில்லை.
ஞானிகள் தேகபந்தம், காமவிகாரம் ஆகியவற்றை தலைவன் துணைகொண்டு நீக்கி விடுகிறார்கள். காமதேகம் நீங்கினால், ஆன்மா தெளிவடையும். ஆன்மா தெளிவடைந்தால் அறிவு தெளிவடையும். அறிவு தெளிவடைந்தால் சிந்தை சிறப்பாக செயல்படும். அறிவு, சிந்தை என்ற மனிதனின் எண்ணங்களுக்கு தெளிவை கொடுத்துக் கொண்டே இருக்கும். அதனால் சிந்தை சிறப்பாக செயல்படும்.
அறிவே அமைச்சன், மனமே மன்னன். அறிவு, மனம், ஆன்மா இந்த மூன்று பேரும் சேர்ந்தே, இந்த உடம்பை காப்பாற்ற வேண்டும். நாம் உலகத்தை காப்பாற்றுவதை பிறகு பார்த்துக்கலாம். முதலில் நமது உடம்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆக நற்காரியத்தை விரைந்து செய்து கொள்ள வேண்டும். நற்காரியம் செய்து கொண்டால்தான் ஆன்மஜெயம் பெறலாம்.
நாம் நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. நம்முடைய வினைக்கு தகுந்தவாறுதான் நம் அறிவு வேலை செய்யும். முன்செய்த பாவம் மிகுந்து இருந்தால், நல்ல சிந்தனை இருக்காது. அங்கே கீழ்த்தரமான புத்திதான் இருக்கும். முன்செய்த பாவம்தான், பொல்லாத வறுமையாக இருக்கு. தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்குதல், தேவையில்லாத பகையை உருவாக்குதல், தீர்க்கமுடியாத நோய், ஆழ்ந்து சிந்திக்க முடியாத மனநிலை போன்றவைகள் முன்செய்த பாவத்தால் வருபவை.
நல்வினை மிகுந்து இருந்தால், நல்ல சிந்தனை, தெளிந்த அறிவு, திடமான உடம்பு, எதைப்பற்றியும் அவசரப்பட்டு முடிவு எடுக்காத பண்புகள் எல்லாம் இருக்கும். அங்கு சினம் இருக்காது. நல்வினை மிகுந்து இருந்தால் கொடிய கோபம், நம்மை அடிமைப்படுத்த முடியாது. நல்வினை மிகுந்திருந்தால் பொறாமை உணர்வு இருக்காது. நமக்கு எமனாக இருப்பது கோபமும், பொறாமையும், பேராசையும்தான். பொல்லாத காமதேகமே நமக்கு எமனாக இருக்கு. தீவினை மிகுந்திருந்தால், பகை, பிரச்சினைகள் இருக்கும், மனதில் நிம்மதி இருக்காது. இவையெல்லாம் தேகத்தின் குற்றமல்ல.
இந்த தேகத்தின் இயல்பை அறிந்து, அது கெடுவதற்கு முன்பே, அதற்கு நரை, திரை, மூப்பு வருவதற்கு முன்னே, ஈளை, இருமல் வருவதற்கு முன்பே, நாம் இந்த தேகத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும். பூஜை செய்தால்தான் உடம்பை காப்பாற்றிக் கொள்கிற பக்குவம் வரும். உடம்பை காப்பாற்றிக் கொள்கிறவன், உயிரை காப்பாற்றிக் கொள்ள அறிய வேண்டும். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, மூச்சுக்காற்றைப் பற்றி அறிய வேண்டும். இதை மகான் இராமதேவர், நீ மூச்சுக்காற்றோடு பழக வேண்டுமென்பார். பிராணாயாமம் அல்லது யோகாப்பியாசம் செய்வதற்கு முன்னே மூச்சுக்காற்றின் இயக்கத்தைப் பற்றியும், அது என்ன செய்யும் என்பதைப்பற்றியும் ஆசான் இராமதேவர் சொல்லியிருக்கிறார்.
ஆன்மஜெயம் பெறுவதற்கு ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆக்கம் பெற்ற ஆன்மாதான் அறிவை தெளிவடையச் செய்யும். அப்ப ஆன்மாவுக்கு ஆக்கம் தர வேண்டும். ஆன்மாவுக்கு அருள்தர வேண்டும். ஆன்மா ஆக்கம் பெற வேண்டும். ஆக்கம் பெற்ற ஆன்மாதான் தெளிவான அறிவாக இருக்கு. அதே மனமாக இருக்கு. அப்ப ஆன்மாவுக்கு தெளிவை உண்டாக்க வேண்டும்.
ஆன்மா, காமம் என்ற இருட்டிலும், நரகம் என்று சொல்லப்பட்ட இந்த உடம்பிலும் இருக்கு. எனவே அந்த ஆன்மாவுக்கு ஆக்கம்தர வேண்டும். ஆன்மாவுக்கு ஊக்கம் தரவேண்டும். ஆன்மா தெளிவடைய வேண்டும்.
ஆன்மாவிற்கு ஒளிதர வேண்டும்.
எல்லா ஞானிகளும் சிறந்த பக்தியாலும், விடாமுயற்சியாலும் ஆன்மஜெயம் பெற்றார்கள். அவர்கள் ஆன்ம ஒளி பெற்றவர்கள், ஆன்ம ஒளியைக் கண்டவர்கள், ஆன்ம ஜோதியைக் கண்டவர்கள். அத்தகைய பெருமை மிகுந்த ஞானிகளின் திருவடியைப் பற்றும்போது ஆன்மா தெளிவடையும், ஆன்மா ஒளி பெறும். இதை ஆன்மஜோதி என்பார்கள்.
நாம் ஞானிகளை வணங்குகிறோம். வணங்கவணங்க, பூஜைசெய்ய, பூஜைசெய்ய, நாமஜெபம் செய்யசெய்ய, ஆன்மாவினுடைய மாசு தீரும். பக்தி செய்யசெய்ய, புண்ணியம் செய்யசெய்ய இருட்டில் கிடக்கிற ஆன்மா வெளிச்சத்துக்கு வரும். ஆன்மாவிற்கு சிறிது வெளிச்சம் கிடைத்தால் அறிவு தெளிவடையும்.
ஆன்மாதான் அறிவாகவும் இருக்கு, மனமாகவும் இருக்கு. புண்ணியம், பக்தி என்ற ஒளியை இருட்டில் கிடக்கிற ஆன்மாவுக்கு தருகிறோம். இதனால் நரகத்திலும், இருட்டிலும் கிடக்கிற ஆன்மா தெளிவடைகிறது. ஆன்மா தெளிவு அடைந்தால் அறிவு தெளிவடையும். அறிவு தெளிவடைந்தால் ஆன்மாவைப்பற்றி அறியும். ஆன்மாவுக்கு ஆக்கம் தந்தால், அறிவு தெளிவடையும். தெளிவடைந்த உயிர், தெளிவடைந்த அறிவு ஆன்மாவைப்பற்றி சிந்திக்கும்.
Saturday, 4 August 2018
மனக்குழப்பத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் மருந்து முருகனின் நாமங்களே!
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....
வறுமையற்ற வாழ்வும், கவலையற்ற வாழ்வும், விஷஜந்துகளால், விபத்தினால், இயற்கை சீற்றங்களினால், முன்ஜென்ம பாவங்களினால், மரண கண்டங்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏதும் அணுகாத அமைதியான வாழ்வை வாழலாம்.
மனஅமைதியுடன் கூடிய ஆரோக்கியமும் நீடிய ஆயுளைப் பெறலாம். மனக்குழப்பத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் மருந்து முருகனின் நாமங்களே என்பதையும் அறியலாம்.
மன அழுத்தமும், மனக்குழப்பமும், முன்ஜென்ம பாவங்களினால்தான் வருகின்றதனால் பயிற்சிகளை செய்வதின் மூலம் ஒருபோதும் மனக்குழப்பத்திலிருந்து விடுபட முடியாது, மனஅழுத்தமும் தீராது.
ஜென்மஜென்மமாய் செய்த பாவத்தை பொடிப்பொடியாக்கும் முருகப்பெருமான் திருவடி கருணையால் தான் பாவங்கள் நீங்கும், பாவவினைகள் நீங்கினால் மனக்குழப்பமும் மனஅழுத்தமும் தானே நீங்கும், பிரச்சனைகளும் ஏதும் வராது என்பதையும் அறியலாம்.
உலகினில் பிறந்த அனைவரும் அனைவரையும் சந்திப்பதும் இல்லை, நட்பு கொள்வதும் இல்லை, பகை கொள்வதும் இல்லை, முன்ஜென்ம தொடர்புடையவர்களைத்தான் இச்சென்மத்திலும் தொடர்ந்து தொடர்பு கொள்கிறார்கள்.
முன்ஜென்மத்திலே செய்திட்ட பாவபுண்ணியங்களுக்கு ஏற்பவே இந்த ஜென்மத்தில் வாழ்வு அமைகிறது.
ஆதலினாலே பணிபுரியும் இடத்தில் வேலையில், உத்தியோகத்தில் பிரச்சனைகள் வருகிறது என்றால் அது நாம் பிறருக்கு முன்ஜென்மத்தில் செய்த இடையூறே, இப்படி இந்த ஜென்மத்தில் வந்துள்ளது என்பதை அறியலாம்.
குடும்பத்திலே பிரச்சனைகள் வருவதும் முன்ஜென்மத்தில் நாம் செய்த பாவமே. கடன் சுமை வருவதும் முன்ஜென்ம பாவமே. இப்படி மனிதன் வாழும் வாழ்வு முழுக்க பாவத்தினால் பிரச்சனைகளும் புண்ணியத்தால் நன்மைகளும் உண்டாகின்றதை அறியலாம்.
பிரச்சனைகளாலும், பிறர் நமக்கு செய்யும் இடையூறுகளாலும், நமது இயலாமையினாலும், பகையினாலும், வஞ்சத்தினாலும், ஏமாற்றத்தினாலும் மனஅழுத்தமும் மனஅமைதியின்மையும் வரத்தான் செய்யும்.
இவையெல்லாம் தீர்க்க, எல்லாம்வல்ல முருகனது திருவடியே கதியென சரணாகதி அடைந்து முருகநாமங்களை சொன்னால் முருகனது அருளால் சூரியனைக் கண்ட பனி விலகுவது போல அனைத்தும் விலகிடும் என்பதையும் அறியலாம்.
எட்டு என்பது அகாரம். இரண்டு என்பது உகாரம்.
வெளிக்காற்றும், உள்காற்றும் சேர்க்கக்கூடிய இடம் புருவமத்தி. அந்த இடத்தில் சேர்த்தால்தான் காற்று ஒடுங்கும். அப்படி ஒடுங்கினால்தான் விகாரம் அற்றுப்போகும். இதை மகான் அகத்தியர்,
பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள்
எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறும்
கட்டிற்குள் நில்லாது சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில் கட்டும்வாசி
சுட்டியின்கீழ் திருவாடுதுறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
- மகான் அகத்தியர் அருளிய துறையறி விளக்கம் - கவி எண் 86.
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள்
எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறும்
கட்டிற்குள் நில்லாது சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில் கட்டும்வாசி
சுட்டியின்கீழ் திருவாடுதுறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
- மகான் அகத்தியர் அருளிய துறையறி விளக்கம் - கவி எண் 86.
.
பெட்டி என்பது வயிறு. வயிற்றில் உணவு எதுவும் இருக்கக்கூடாது. கால் வயிறு அளவுதான் உணவு இருக்கவேண்டும். அளந்துதான் சாப்பிட வேண்டும். பத்மாசனம் இட்டு, ஆசானை நினைத்து மூச்சுக்காற்றை உள்ளே இழுக்க வேண்டும்.
பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதனை - பாம்பு என்றால் கருஞ்சாரை, வெஞ்சாரை. அல்லது இடகலையையும் பிங்கலையையும் சேர்ப்பது எனப்படும். அப்படி அடைத்து வைக்கின்ற காற்று என்ன செய்யும்?
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள் - ஆக அந்தக்காற்றை எப்படி ஆட்டுவது? அந்தக்காற்றை எப்படி இலயப்படுத்துவது? அந்தக்காற்றை எப்படி ஸ்தம்பிப்பது? எப்படி புருவ மத்தியில் செலுத்துவது? என்பது தெரியாது. எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால் - எட்டு என்பது அகாரம். இரண்டு என்பது உகாரம்.
கண்டஸ்தானத்தில் இருக்கும் காற்றையும், வெளிக்காற்றையும் சேர்க்க வேண்டும். இது நம்மால் முடியாது. தலைவன் ஆசி இருக்க வேண்டும். வெளிக்காற்று - பரமாத்மா, உள்காற்று - ஜீவாத்மா. இந்த உள்காற்றையும், வெளிக்காற்றையும் சேர்த்து புருவமத்தியில் செலுத்தினால் அது என்னாகும்? வெளியே போகமுடியாது. இதை ஆசான் நயமாக சொல்லுவார், வெளிக்காற்று, உள்காற்று இரண்டையும் சேர்த்து ஆட்டினாக்கால் இருபுறமும் ஆடிவர எதிரேயேறுங் - வேறு வழியே இல்லாமல் மேலே போய்விடும். கட்டினுக்குள் நில்லாது சிரசிலேறும் - அதற்கு வேறு வழியேயில்லை சிரசில் ஏறும்.
கடைவாசல் சுழிமுனையில் கட்டும் வாசி
சுட்டியின்கீழ் திருவாடுதுறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
சுட்டியின்கீழ் திருவாடுதுறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
என்றார். எதற்கு ஆசான் அகத்தீசரும், மகான் திருவள்ளுவரும் இப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்லுகிறார்கள்? ஆக இப்படித்தான் யோகிகள் செய்திருக்கிறார்கள். இப்படி ஆசானின் ஆசி பெற தினம் தினம் பூஜை செய்ய வேண்டும். பிராணாயாமம் செய்கிறவர்கள் உணவு அரை வயிறாக சாப்பிட வேண்டும்.
பாசிப்பயிறு, பச்சரிசி, பழங்கள் சேர்க்க வேண்டும். பசு நெய் சேர்க்க வேண்டும். முறையோடு பிராணாயாமம் செய்து, ஆசான் ஆசி பெறவேண்டும். ஆக ஞான சித்தர் காலம் வருவதால் இந்தக்கருத்துக்கள் ஊரெங்கும், உலகெங்கும் பரவவேண்டும். ஞானிகளின் திருவடியைப் பற்றினால் மரணத்தை வெல்லலாம், ஞானிகளின் திருவடியைப் பற்றினால் நச்சுத்தேகமாகிய விஷதேகத்தை வீழ்த்தலாம். ஞானிகளின் திருவடியைப் பற்றினால் நமது அந்திமக்காலத்தில் கட்டக்கூடிய கபத்தை இப்போதே அறுத்து எடுத்துவிடலாம்.
உண்மையான ஆன்மீகவாதியை எப்படி அறிவது?
உண்மையான ஆன்மீகவாதியை எப்படி அறிவது? மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
பொல்லா இருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்
அல்லா யிருந்திடும் ஆறொக்கு மேஅறி வோருளத்தில்
வல்லார் அறிவார் அறியார் தமக்கு மயக்கங் கண்டாய்
எல்லாம் விழிமயக் கேயிறை வாகச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருஏகம்பமாலை - கவி எண் 17.
அல்லா யிருந்திடும் ஆறொக்கு மேஅறி வோருளத்தில்
வல்லார் அறிவார் அறியார் தமக்கு மயக்கங் கண்டாய்
எல்லாம் விழிமயக் கேயிறை வாகச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருஏகம்பமாலை - கவி எண் 17.
ஆசான் பட்டினத்தார் காஞ்சிபுரத்தில் இருந்தார். அவரைப் பார்க்க ஒருத்தன் வந்தான். இவரது எளிமையைப் பார்த்து இவரெல்லாம் சாமியாரா என்று சொல்லிவிட்டான். அவர் கூட இருந்தவர்கள் எல்லாம் என்ன உங்களை இப்படி பேசுகிறான் என்று சொன்னார்கள். அதற்கு அவர், “அவன் கோட்டான் மாதிரி”என்றார்.
கூகை என்றால் கோட்டான். பகலில் அதற்கு கண் தெரியாது. ஆனால் பிரம்மாண்டமான சூரியன் பகலில் இருக்கு. ஆனால் கோட்டானுக்கு மட்டும் பகலில் கண் தெரியாது. இதை ஆசான் பட்டினத்தார் சொல்வார்.
பொல்லா இருளகற்றும் - அமாவாசை இருட்டு போல இருக்கும். ரொம்ப காரிருள் என்பார்கள். மழை மேகம் மூடியிருந்தால் காரிருளாக இருக்கும். அப்ப சூரியன் வந்தவுடன் வெளிச்சமாகிவிடும்.
பொல்லா இருளகற்றும் கதிர் - கதிர் என்றால் சூரியன். கூகையின் புண்கண்ணிற்கு - இந்த கோட்டானுக்கு பகலில் இருட்டாக இருக்கு என்று சொன்னார். அதுபோல உண்மை ஞானிகளான எங்களை கண்டுபிடிக்க முடியாது.
மேலும் ஆசான் பட்டினத்தார் சொல்லிலும் தெரிந்து கொள்ளலாம் என்பார்.
பொருளுடையோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்துந்
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங் கச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருஏகம்பமாலை - கவி எண் 15.
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங் கச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருஏகம்பமாலை - கவி எண் 15.
இப்படியும் காஞ்சிபுரத்தில் பேசியிருக்கிறார் ஆசான் பட்டினத்தார். அப்போ அடிப்படை என்னவென்றால் ஞானிகளை சுலபமாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால் அவர்களுடைய பேச்சில் தெரிந்து கொள்ளலாம் என்பார்.
பொருளுடையோரைச் செயலிலும் - நிறைய பொருளிருந்தது என்றால் வாகனம் வாங்குவான், வீடு கட்டுவான். அதிலிருந்து அவனிடம் நிறைய பணம் இருக்குதென்று தெரிந்து கொள்ளலாம்.
வீரரைப் போர்க்களத்தும் - வீரமுள்ளவனை எங்கே பார்க்க வேண்டும்.போர்க்களத்தில் பார்க்க வேண்டும். இங்கே வாய்சவடால் அடிப்பான். போர்க்களத்தில் அவனவன் தலை உருண்டுக்கிட்டே இருக்கும். அங்கே போகும்போது பயந்துவிடுவான்.
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல் – ஒருவனை பார்க்கும்போதே மிகத்திறமையான ஆள் என்று சொல்லிவிடுவார்கள்.
அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில் இருளறு சொல்லிலுங் காணத்தகும் - ஞானிகள் தன்னுடைய பேச்சில் ஒருவனுக்கு மாயையை உண்டுபண்ண மாட்டார்கள். அவனுக்கு தெளிவான பாதையை காட்டுவார்கள். அப்படிப்பட்ட ஞானியை பார்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆசான் பட்டினத்தார் சொல்வார்.
அவர் பேச்சு அத்தனையும் மனிதகுலத்துக்கு ஒளிவிளக்காக இருக்கும். அப்படி பேசுபவரைதான் கண்டுபிடிக்க வேண்டும். ஞானிகளை அப்படித்தான் அடையாளம் காட்டுவார் ஆசான் பட்டினத்தார். ஒருவனுடைய பேச்சு மற்றவனை மடையனாக்கும்படி இருந்தால் அவன் அருளில்லாதவன். ஆனால் ஞானிகள் பேச்சு தெளிவாக இருக்கும். இதுதான் மார்க்கம். இதைக் கடைப்பிடி என்று சொல்வார்கள்
அரவ மாட்டேல்
முருகப்பெருமானின் அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை!
அரவ மாட்டேல்
அரவம் என்பது பாம்பாகும். பாம்பு என்னும் உயிரினமானது தமது வாயில் நச்சுப்பற்களோடு நஞ்சை வைத்துக் கொண்டுள்ளது. அது கொடுமையான உயிரினம். அத்தகைய கொடிய உயிரினத்தோடு யாரும் விளையாடமாட்டார்கள்.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. மிகப்பெரும் வீரர்கள் கொண்ட படையில் பாம்பு புகுந்துவிட்டால் அந்த வீரர் படை தம் வீரத்தை மறந்து நடுங்கும், அந்த அளவிற்கு கொடியது பாம்பாகும். இது அனைவருக்கும் தெரிந்ததே.
ஞானமார்க்கத்தில் குரு சீடர் பாரம்பரியமாக பலப்பல இரகசியச் சொற்களை ஞானிகள் பயன்படுத்தி வந்தனர். அப்படி பயன்படுத்திய சொற்களில் ஒன்றுதான் “அரவம்” என்கிற சொல்லாகும். ஞானமார்க்கத்தைப் பற்றி அறிந்தவர்களுக்கு இது தெரியும்.
அரவம் என்றால் பாம்பு என்ற பொருள் இருந்தாலும் அரவம் என்பது ஞானமார்க்கத்தில் யோகநிலையில் ஒரு ஞானி வாசிப்பயிற்சியாகிய வாசி யோகத்தின் போது மூச்சுக்காற்றினை “அரவம்” என்ற இரகசிய வார்த்தையால் குறிப்பிடுவார்கள். இடது நாசியில் வருகின்ற காற்றை கருஞ்சாரை (கருநாகம்) என்றும் வலது பக்க நாசியில் வருகின்ற காற்றை வெஞ்சாரை (வெண்நாகம்) என்றும் குறிப்பிடுவார்கள்.
இத்தகைய வாசிப்பயிற்சியானது மும்மலதேகத்தின் மும்மலக் குற்றத்தை நீக்குதல் பொருட்டு ஆசான் ஞானபண்டிதன் உடனிருக்க ஞானிகள் துணையோடு காலம்காலமாக சிறிது சிறிதாக கணப்பொழுதும் நினைவினின்று வழுவாது காலநேரம் பாராது சதாசர்வகாலமும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய ஒரு யோகப்பயிற்சியாகும்.
இத்தகைய யோகப்பயிற்சியானது வழிவழி வருகின்ற தொண்டர் கூட்டத்திற்கு குருமுகாந்திரமாக குருநாதர் உடனிருந்து உடற்தகுதி, உணவு முறை, சூழ்நிலை, தட்பவெப்பம் போன்றவற்றிற்கேற்பவும் தவத்தின் தன்மைக்கேற்பவும் அளந்து அளந்து சொல்லி தரப்பட்டு கவனத்துடன் அதிநுட்பமாக செய்கின்ற ஒரு பயிற்சியாகும்.
இந்த பயிற்சி செய்கின்றவர் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவரது யோகமும் தவமும் பாழ்பட்டு, ஏன் சமயத்தில் இறந்துவிடவும் கூடும். ஒரு துறவு நிலை கொண்டவரானாலும் ஆசான் துணையின்றி செயல்பட்டால் அடுத்து என்ன செய்வது? எனத் தெரியாமல் உள்ளே சென்ற காற்றானது வெளியேற முடியாமல் அவனைக் கொன்றுவிடும்.
அதுமட்டுமல்ல இல்லறத்தார்கள் மிகமிக ஆற்றல் வாய்ந்த இந்த வாசியோகப்பயிற்சியினை செய்யக்கூடாது. ஏனெனில் வாசியோகப்பயிற்சியின் அளவு, காலம், எவ்வளவு காலம் செய்ய வேண்டும் என்றெல்லாம் தெரியாமலும் அதன் தன்மை தெரியாமலும் செய்வார்களேயானால் இறுதியில் இறந்து விடுவார்கள். வாசியோகப் பயிற்சியின் போது நம் உடம்பிலுள்ள மூலக்கனலே எழும்பி அளவிலாத உஷ்ணத்தை கொடுக்கும். இல்லறத்தானுக்கு ஞானக்கனலும், அவனிடமுள்ள காமக்கனலும் சேர்ந்து உடம்பில் அளவில்லாத வெப்பத்தை உண்டாக்கி கடுமையான மலச்சிக்கல் முதல் பலப்பல நோய்களை உண்டாக்கி கடைசியில் அவனை இறந்துவிடும்படியான ஒரு சூழ்நிலையை உண்டாக்கிவிடும்.
எனவே இத்தகைய தகுதியில்லாத செயலை இல்லறத்தான் செய்தல் ஆகாது என்பதினாலேயே அரவ மாட்டேல் (காற்றுடன் விளையாடாதே, வாசிப்பயிற்சியை விளையாட்டாகச் செய்யாதே) என மறைபொருளாக கூறி வைத்தார் மகான் ஒளவையார்.
அற்பமா மூட ரறியாமல் யோகம்
சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்
கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர்செய் யோகம் அழிம்பிது பாரே.
-மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூஸ்திரம் 21 - கவி எண் 17.
Subscribe to:
Posts (Atom)