Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Monday, 7 October 2019

இளமையில் கல்


திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்

மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை




கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான வாழ்வின் அத்தியாவசியமான ஒன்றாகும். அந்த கல்வியினை எப்போது வேண்டுமானாலும் கற்க முடிந்தாலும், தக்க தருணமாகிய இளமையில் கற்பதுதான் நன்மை பயக்கும்.


ஏனெனில் மனிதனின் பரிணாம வளர்ச்சிப்படி அவனது இளமைப் பருவமாகிய பதினாறு வயதிற்குள்தான் அவனது கற்றல் திறனானது அதிகமாக இருக்கின்றது. அதனினும் அவன் இளமையில்தான் உடல்சார்ந்த மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏதுமின்றி மிகத் தெளிவாக எளிமையான வகையில் அவனது சிந்தனையும் செயலும் தூய்மையானதாக இருக்கின்றது.


பதினாறு வயதிற்கு மேல் அவனது சிந்தனையும் செயலும் ஒருமுகப்படுத்த முடியாமல் பல்வேறு விதமான வழிகளில் அலைபாயவிடுவதோடு கல்வியில் நாட்டம் குறைந்து பிற விசயங்களை கற்பதில் நாட்டம் அதிகமாகிவிடும். என்னதான் மனம் ஊன்றி கல்விகற்க முயற்சித்தாலும் அவனது தேகமும் மனமும் அவனை சிந்திக்கவிடாமல் அவனை அலைக்கழித்துவிடும்.


எனவே எதைக் கற்பதாக இருந்தாலும் அதை இளமையில் கற்றால்தான் அவன் கற்பதன் முழுப்பலனை பெறமுடியும். எவ்வித தடைகளும் இல்லாத  இளம்பிராயத்தில் கற்கின்ற அனைத்தும்பசுமரத்து ஆணிபோலஅப்படியே எளிமையாக மனதில் ஆழமாக பதியும்.


இங்கு கல்வி என்பது இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று இவ்வுலக விசயங்களான வாழ்க்கை வாழ்வதற்கான உலகியல் சார்ந்த மாயா காரிய  சம்பந்தமுடைய இகலோக வாழ்வினை அடிப்படையாகக் கொண்டே ஞாபகங்களை அடிப்படையாக கொண்டு மனதில் பதிய வைக்கின்ற வகையில் நடத்தப்படுவதும், இகலோகக் கல்வியாகிய ஏட்டுக்கல்வியாகும்.


மற்றொன்று இவ்வுலக விசயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு மாயா காரிய சம்பந்தமில்லாத முற்றுப்பெற்ற முனிவர்களாலும், சித்தர்களாலும், தேவர்களாலும், ரிஷிகளாலும் வழிவழியாக குருகுலத்தின் வழியாக உலகின் உண்மையை பரம்பொருளைக் குறித்த, பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்ட மேம்பட்ட பரலோக வாழ்வைக் குறித்த கல்வியாகும்.


இது கற்காமலேயே  பக்தியினாலும் உணர்விக்கப்படுவதினாலும் அவரவர் குருமுகாந்திரத்தினால் தம்முள் கற்கின்ற என்றும் அழியாத சாகாக் கல்வியாகும்.


மனிதன் இவ்வுலகில் வாழ வேண்டுமென்றால் அவனுக்கு நடைமுறை கல்வியாகிய பள்ளிக் கல்வி அவசியம்தான், ஏனெனில் அந்த பள்ளிக் கல்வி  மூலம்தான் அவன் மொழியறிவையும், சமூக அறிவையும், உலக அறிவையும், கணிதம், விஞ்ஞானம், பூகோளம், சரித்திரம், தொழில்நுட்பம் போன்ற  வாழ்க்கைக்கு தேவையான அனைத்துவித அறிவுகளையும் அவனால் பெற  முடியும்.


இல்லறத்தார்கள் தங்களது வாழ்வை நடத்திட தேவையான பொருளாதாரத்தை அளிப்பதும் இந்த கல்வியின் பிரதிநிலையேயாகும்.
ஆதலால் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் அடிப்படைக் கல்வியேனும் கட்டாயம் கற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் இவ்வுலகில்  பிறரை புரிந்துகொண்டு வாழமுடியும். இல்லையெனில் கல்வி இல்லாதவன்  வாழ்வானது கடும் சிரமத்திற்கு உள்ளாகும்.


அப்படி கற்கும் கல்வியை கற்கும் காலமான இளமையான வயதாகிய பதினாறு வயதிற்குள்ளாகவே கற்க வேண்டும். அதன்பிறகு கற்பவையெல்லாம் அவன் கட்டாயத்தின் பேரில்தான் கற்க முடியுமே தவிர ஈடுபாட்டோடு இருக்க முடியாது. எனவே இளமையிலேயே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக தமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான கல்வியினை தரமாக தந்து அவர்களது வாழ்வை வளமாக்கிட வேண்டும்.


ஒவ்வொருவரும் தம்தம் பிள்ளைகளை இவ்வுலகின் பரிணாமத்தில் சிறந்து விளங்க அவரவர்கள் அவரவரால் முடிந்த அளவு தமது பிள்ளைகளுக்கு தேவையான கல்வியினை அளித்துள்ளார்கள். ஆயினும் இது வெறும்  ஏட்டுக்கல்விதான். அவன் இறந்த உடன் அவன் எவ்வளவு கற்றிருந்தாலும் அவன் பாடுபட்டு பன்னெடுங்காலம் கற்ற கல்வியனைத்தும் அவனைவிட்டு சென்றுவிடுகிறது.


அவன் கற்றகல்வி அவனது மறுபிறவிக்கு செல்லுமா என்றால் கண்டிப்பாக செல்லாது. சரி அவன் ஞாபகமானது குறைந்தாலோ விபத்தினாலோ ஞாபகக்குறைபாடு ஏற்பட்டாலோ, அவன் அதுவரைக் கற்ற கல்வி பயன்படுமா என்றால் கண்டிப்பாக பயன்படாது.


ஆக இகவாழ்வை மட்டும் சார்ந்துள்ள இந்த கல்வி கற்றாலும் என்றும் அழியாத, நீரால், நெருப்பால், காற்றால் அழிக்க முடியாததும், பஞ்சபூதங்களினால் எந்த இடையூறும் செய்ய முடியாததும் யுகம்யுகமாக ஆன்மாவைத் தொடர்ந்து பற்றி வருகின்றதும் இன்று கற்றால் இனி எடுக்கும் ஜென்மங்கள்தோறும் தொடர்ந்து தொடர்ந்த இடத்திலிருந்து தோன்றி மனிதனை மனிதனாக, மனிதனை தேவனாக, ஏன் மனிதனை கடவுளாகவும் ஆக்க வல்லதும், எம்பெருமான் முருகப்பெருமானாரால் தோற்றுவிக்கப்பட்டு எண்ணிலாகோடி சித்தரிஷிகணங்கள் தோன்ற காரணமாயிருந்ததும், பாவ புண்ணியம் பற்றி உரைப்பதும் மனிதன் கடைத்தேறும் மார்க்கம் கூறுவதும், இல்லறத்தானும், துறவறத்தானும், யோகியும், ஞானியும் இப்படி எல்லோரும் எல்லாவிதத்திலும் வாழ்கின்ற வாழ்வை வளமாக வாழ வழி சொல்லுகின்ற மாபெரும் கல்வியாம் சாகாக்கல்வியை கற்பதே உண்மையான கல்வி கற்றதாகும்.


ஒரு மனிதன் கல்விகற்பதற்கு அவனது இளமையான பருவம்தான் தக்க சூழ்நிலையாகக் கொள்ளப்படுகிறது. அதே போலத்தான் ஞானக்கல்வியாகிய சாகாக்கல்வியை கற்கவும் இளமையே தக்க பருவமாகும்.


ஏனெனில்  சாகாக்கல்வியை கற்றிட ஜாதி, மத, இன, மொழி, துவேசங்கள் மனதினுள் இருக்கக்கூடாது. ஜீவகாருண்யம் மிக்கவராக இருக்கவேண்டும்.  பிறஉயிர்கள்பால்  அன்பு செலுத்தவேண்டும். காமவிகாரமற்று  இருக்கவேண்டும். பொருள்பற்று இருக்கக்கூடாது. பொய்பேசக்கூடாது.


இந்த பண்புகள் அனைத்தும் மனிதனுடைய வாழ்வில் பிள்ளைபிராயத்தில் அதாவது பாலபருவத்தில் நற்பண்புகள் அதிகமாகவும் வயது ஏறஏற இந்த  நற்குணங்கள் குறைந்து பிறநாட்டங்கள் அதிகமாகி அவனது மனமும், சொல்லும், செயலும், சிந்தனையும் படிப்படியாக களங்கப்பட்டு இறுதியில்  அசுத்தமாகிவிடுவதால், அசுத்தமான மனதில் தெளிவான ஞான அறிவினை ஏற்படுத்துவது மிகவும் கடினமானதும், இயலாததும்கூடதும் ஆகும்.


ஆதலினால் பெற்றோர்கள் கடமையாக இந்த நாட்டிற்கு எதிர்கால நல்ல சந்ததிகளை அளித்து நாடு நலம் பெற வேண்டி ஒவ்வொருவரும் தமது  கடமையாக உலக நலம் பெற வேண்டி தமது பிள்ளைகளை நல்லோராக  வளர்க்கின்ற பொறுப்புள்ள பெற்றோரின் கடமையாக இளமைப்  பருவத்திலேயே பாலபருவம் தொடங்கியே பிள்ளைகளுக்கு எளியமுறையில்  பக்தி நெறியினை ஊட்டி வளர்த்திடல் வேண்டும்.


சிவபுராணம், தேவாரம், திருவாசகம், சித்தர்பாடல்கள், வள்ளலார் பாடல்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல் போன்ற மாமேருவான ஞானிகளால் படைக்கப்பட்ட அதிஅற்புதமான மனிதனுக்கு நல்லறிவு ஊட்டி வினைதீர்த்து  மனிதனை மேல்நிலைப்படுத்தி ஆன்ம சுத்தி செய்து மனிதனை கடவுளாகவும் ஆக்கவல்ல நூல்களை படிக்கச்செய்து தினந்தினம் தவறாமல் பக்தி நெறிக்கு உட்படுத்தி ஒரு சிறு கால அளவேனும் அவர்களை பூஜை செய்திட சொல்லி அதற்கான உதவிகளை பெற்றோர்கள் செய்து கொடுத்து அவர்களுக்கு நினைவுகளில் நல்ல செய்திகளை, பக்தியை, விசுவாசத்தினை பதியவைத்திடல் வேண்டும்.

அவர்களுக்கு முற்றுப்பெற்ற ஞானிகளை அறிமுகப்படுத்தி அவர்களை வணங்கிடச்செய்து பாவபுண்ணியமற்ற பரமானந்த ஜோதி சுடர்களான  ஞானிகளின் அருளாசி கிடைத்திடும்படி செய்திட வேண்டும்.

இளமையிலேயே தர்மத்தினைப் பற்றியும், தர்மத்தின் பலத்தினை, தர்மத்தின் ஆற்றலை கூறி அவர்கள் உணரும்படிச் செய்து சிறுவர்களது கைகளாலேயே தானங்கள், தர்மங்கள் செய்திடும்படி செய்து தான பண்பினையும் தர்மம் செய்கின்ற பண்பினையும் வளர்த்து அவர்களை நல்லவர்களாக ஆக்கி இவ்வுலக சமுதாயத்திற்கு அவர்களை நல்ல மக்களாக ஞானிகள் விரும்புகின்ற மக்களாக ஆக்கிடவேண்டும்.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
- திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் எண் 2.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின், தூய்மையான அறிவுள்ளவன் திருவடியை பற்றாவிட்டால் நீ என்ன கற்று, என்ன பயன் என்று சொன்னார்.


சிறுவர்களுக்கு ஞானமா? அவர்களுக்கு இது புரியுமா? விளையாட்டுப்பருவத்தில் தேவாரமா? திருவாசகமா?
அய்யோ என்மகன் சாமியாராகிவிடுவானே! குடும்ப வாழ்க்கையில் பின்னாளில் நாட்டம் இருக்காதே! பள்ளிக்கூட கல்வியில் அவனுக்கு நாட்டம் இருக்காதே! வாழ்க்கையில் பணம் சம்பாதிக்கின்ற எண்ணம் வராதே! என்றெல்லாம் குழப்பிக்கொள்ளக்கூடாது.

இவையனைத்தும் அனுபவித்து அவற்றின் உண்மைத் தன்மையை உணர்ந்து பின் அவற்றையெல்லாம் கடந்து பெருநிலையடைந்தவர்கள்தான் ஞானிகள்அவர்களுக்கு இந்த பிரச்சனைகள் அனைத்தும் தெரியும். அவர்கள் அவரவர் தகுதிக்கேற்ப அருள் செய்வார்கள். பிள்ளைகளுக்கு இளமையில் பாலபருவத்தில் இவை புரியுமா? என கேட்கக்கூடாது. புரிகிறதோ புரியவில்லையோ ஞானிகள் நூல்களை ஞானிகளைப்பற்றிய செய்திகளை அவர்களது நினைவுகளில் பதியவைக்கவேண்டும். ஏனெனில்,


சித்தர் மொழிநூல்தனை தொட்டபோதே
சித்தரெல்லாம் ஒன்றென சேர்ந்து கொள்வார்

 என்பது ஞானிகள் வாக்காகும். எப்போதெல்லாம் பிள்ளைகள் ஞானிகள் நாமம் சொல்கின்றார்களோ, எப்போதெல்லாம் ஞானிகள் நூலினை தொடுகிறார்களோ எப்போதெல்லாம் ஞானிகள் நூலினை வாசிக்கின்றார்களோ எப்போதெல்லாம் ஞானிகளைப்பற்றி பேசுகிறார்களோ எப்போதெல்லாம் ஞானிகளைப்பற்றி சிந்திக்கின்றார்களோ அப்போதெல்லாம் எங்கும் வியாபித்து உள்ள ஞானிகள் அழைக்க அக்கணமே வந்துஅஞ்சேல் மகனே! யாமிருக்க பயம் ஏன்?” என ஓடிவந்து அருள்செய்வதினால் பால பருவப்பிள்ளைகள் சித்தர் நூல்களை படித்தாலும், தொட்டாலும், கேட்டாலும் ஞானிகளின்  ஆசியைப்பெற்று வாழ்வில் பலப்பல முன்னேற்றங்களை அடைவார்கள்  என்பது எங்களது அனுபவமாகும்.


கல்வி கற்பது கண்டிப்பாக வேண்டும். அதுவும் கற்கவேண்டிய பருவத்திலேயே கற்க வேண்டியதை கற்றுக் கொள்ள வேண்டும். இதன் அவசியத்தைத்தான் பல ஞானிகளும், முனிவர்களும் பல நூல்கள் வாயிலாக வலியுறுத்திக் கூறுகிறார்கள்.

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.
-கந்தர் அநுபூதி- அருணகிரிநாதர்

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்தன் வார்த்தை...
- திருஅருட்பா - இராமலிங்கசுவாமிகள்.

ஒருவன் இகலோக கல்வியான ஏட்டுக்கல்வியாக இருந்தாலும் பரலோக ஞானக்கல்வியாக இருந்தாலும் இளமையிலேயே கற்க வேண்டும். அவன் இளமையில் ஞானத்திற்கான அறிவை அவனுக்கு புரிந்தாலும் புரியாவிட்டாலும் கற்றால்தான் பின்னாளில் ஆசான் அருள் செய்ய முற்படும்போது அதற்குண்டான பரிபக்குவத்தில் இருக்க முடியும். அவ்வாறின்றி அவன் கற்க மறந்தால், அருள் செய்தாலும் ஆசானின் அருளை இன்னதென்று உணர முடியாமல் போய்விடும்.  கிடைக்கக்கூடிய அரிய வாய்ப்பை இழந்துவிடுவான்.

ஆகவே  காலமுள்ளபோதே கற்க வேண்டியவற்றை கற்க வேண்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிடக் கூடாது என்பதை உணர்த்தவே மகான் ஒளவையார் இளமையில் கல் எனக் கூறுகிறார்.

குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

மு.வரதராசனார் உரை:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

மு.வரதராசனார் உரை:
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.


இதை எமக்கு கற்றுக்கொடுத்த குருநாதர் ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்களின் பொற்திருவடிகள் சரணம் சரணம்!!


 https://www.facebook.com/MahanArumugaArangar/

No comments:

Post a Comment