Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Monday, 11 November 2019

வேள்வி, யாகம் என்பதே ஜீவதயவை பெருக்குவது ஒன்று மட்டுமேயாகும்


முருகா என்றால்,



பெறுதற்கரிய மானுடதேகம் பெற்றவர்கள்தான் பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், அவ்வுயிர்களுக்கு உதவி செய்து அவ்வுயிர்படும் துன்பத்தை நீக்குகின்ற வல்லமையையும் பெற்றது என்பதை அறியலாம்.


பிற உயிர்கள் அஞ்சி நடுங்கும்படி செய்கின்றவனுக்கு, தான் அஞ்சி நடுங்கும்படியான சூழ்நிலை வரும் என்பதை அறியலாம்.


ஒரு உயிர், கொலை செய்யப்படும்போது அவ்வுயிர் படுகின்ற துன்பத்தை அறியக்கூடிய உணர்வை தந்து, பிறஉயிர்களுக்கு இனி மேலும் துன்பம் செய்யக்கூடாது என்ற உறுதியைதந்து இதுவரை நாம் செய்த இந்த மகாபாதக செயலின் பாவத்திலிருந்து விடுபட முருகனிடத்து மன்றாடுவான்.

அகவேள்வியும் புறவேள்வியும்

யாகம் என்பது வளர்த்தல் என்பதாகும். யாகம் செய்து வளர்க்கப்பட வேண்டிய ஜீவகாருண்யமே அல்லாது நெருப்பை மூட்டி நெருப்பை வளர்ப்பது  அல்ல. அதாவது மனிதனுள் உள்ள ஜீவதயவினை, தயவெனும் ஒளியினை,  தயவெனும் ஆன்ம ஜோதியை வளர்ப்பதாகும். அதை விடுத்து புறத்தில் காணப்படுகின்ற எரிகின்ற நெருப்பான ஜோதியை எரியும் நெருப்பை  பலவித பொருள் கொண்டு மேலும் மேலும் வளர்க்கின்றதான, செயல் யாகம் அல்ல.

ஆன்ம ஜோதியான ஆன்மா எனும் அணையா நெருப்பை, தீபத்தை மேலும் ஒளி பெறச்செய்வதான ஆன்ம யாகத்தை வளர்த்திட,


ஓம் சரவண பவ எனும் அருட்சோதி வடிவினனான அந்த சுயஞ்சோதி பிரகாச பேரொளியாளன் முருகப்பெருமானின் மூலமந்திரத்தை செபிப்போம்.


நம்மைப்போலவே கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்திடல் வேண்டும்.


உயிர்களை உடல் விட்டு நீக்கும் கொடும் கொலைபாதக செயலை செய்யாதிருத்தல் வேண்டும்.


உயிர்க்கொலை செய்து உடல்தனை உண்ணும் கொடும்பாவத்தை செய்யாதிருத்தல் வேண்டும்.


எந்த அளவிற்கு இயலுமோ, அந்த அளவிற்கு பிற உயிர்களுக்கு பசியாற்றிவித்து அவ்வுயிர்களுக்கு பாதுகாவலனாய் இருக்க வேண்டும். 


நமக்கு உற்ற விருந்தை உபசரிப்பதும், பிறரை மதித்து நடத்தலும் பிறர் குற்றத்தை பொறுத்தலும் அவர் நமக்கு செய்த குற்றத்தை மன்னித்து, விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும்.


எதிலும் பொது நோக்கமாய் இருத்தல்.

இவையனைத்துமே ஆன்மசோதி விளக்கம் பெறுவதற்கான செய்யப்படுகின்ற ஆன்ம வேள்வியாகிய யாகத்தினை வளர்க்கும் உபாயங்களாகும். இவையே ஆன்மசோதியை அருட்பெருஞ்சோதியாக மாற்றவல்ல சக்திகளாகும்.

வேள்வி, யாகம் என்பதே ஜீவதயவை பெருக்குவது ஒன்று மட்டுமேயாகும் என்பதை அறிந்து தெளியுங்கள்.


பகலவனாம் முருகனின் பாதம் பணிந்திடவே
இகழெலாம் விலகியே இன்பம் உண்டாம்.

மகான் திருவள்ளுவப்பெருமானும் தமது திருக்குறளில் கொல்லாமை, புலான்மறுத்தல் என்ற தலைப்பில் ஒரு அதிகாரமாகவே இதை வைத்து இதன் முக்கியம் பற்றி இம்மனித சமுதாயத்திற்கு அறிவிக்கிறார்.

கொல்லாமை

குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

மு.வரதராசனார் உரை:
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

குறள் 322:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

மு.வரதராசனார் உரை:
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

குறள் 323:
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

மு.வரதராசனார் உரை:
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

குறள் 324:
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
மு.வரதராசனார் உரை:
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

குறள் 325:
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

மு.வரதராசனார் உரை:
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.

குறள் 326:
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

மு.வரதராசனார் உரை:
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

குறள் 327:
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

மு.வரதராசனார் உரை:
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

குறள் 328:
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

மு.வரதராசனார் உரை:
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

குறள் 329:
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

மு.வரதராசனார் உரை:
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

குறள் 330:
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

மு.வரதராசனார் உரை:
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

புலான்மறுத்தல்

குறள் 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

மு.வரதராசனார் உரை:
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.

குறள் 252:
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

மு.வரதராசனார் உரை:
பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

குறள் 253:
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

மு.வரதராசனார் உரை:
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

மு.வரதராசனார் உரை:
அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

குறள் 255:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

மு.வரதராசனார் உரை:
உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

குறள் 256:
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

மு.வரதராசனார் உரை:
புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.

மு.வரதராசனார் உரை:
புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

குறள் 258:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

மு.வரதராசனார் உரை:
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

குறள் 259:
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

மு.வரதராசனார் உரை:
நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

குறள் 260:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

மு.வரதராசனார் உரை:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.


இப்படி எந்தவொரு சூழ்நிலையிலும், உயிர்க்கொலை செய்யாது, புலால் உண்ணாது, ஜீவதயவே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்று முழுமையாக நம்பி ஆன்ம இலாபத்தை பெறுவதற்கு அடிப்படை ஜீவதயவு என்று உணர்ந்து ஜீவதயவின் தலைவனாம் ஜீவதயவுடை சோதி சொரூபனாம் முருகனை இடைவிடாது செபித்து ஆன்மாவை ஒளி பெற செய்வதே உண்மையான வேள்வி அல்லது யாகமாகும்.

- சுபம்-

Thursday, 24 October 2019

எல்லாம் வல்ல தெய்வம் எம்பெருமான் முருகன்!


முருகப்பெருமானை வணங்கிட :


உலக வாழ்விற்காக கற்ற கல்வியின் துணை கொண்டே பரவாழ்வாகிய  மோட்ச லாபத்தை அடைவதற்கான பரவாழ்க்கை கல்வியை கற்க வேண்டும்  என்பதை அகத்தீசர் அருளால் அறிந்து கொள்ளலாம்.



இக வாழ்க்கையில் இருந்து கொண்டே இகவாழ்வின் கடமைகளை செய்து  கொண்டு இகவாழ்வின் துணை கொண்டு ஆனால் இகவாழ்வினில் ஆழ்ந்து  போகாமல் தண்ணீர் இலை தாமரை போல வாழ்ந்து பரவாழ்க்கைக்கான  முயற்சிகளை தவறாது செய்து செய்து வெற்றி கண்டவன் தான்  முருகப்பெருமான் என்பதையும், எந்த தேகம் காமத்திற்கு காரணமாக அமைகிறதோ இகவாழ்விற்கு துணையாய் அமைகிறதோ அந்த காமதேகமே  பரவாழ்வாகிய ஞானத்தை அடையவும் காரணமாக அமைவதை அறிந்து  காமக்கசடுடைய தேகமதை வெறுக்காமல் அந்த காமதேகத்தினை  காமத்திற்கு பயன்படுத்தாமல் யோகத்திற்கு பயன்படுத்தியதோடு  தேகத்தினுள் காமத்தீயை ஏற்படுத்தி தேகத்தை அழித்து பிறவி எடுக்காமல் யோகத்தீயை உண்டாக்கி தேகத்தை சுட்டு கசடு நீக்கி தூய்மையாக்கி  ஞானதேகமாக மாற்றி, வெற்றி கண்டவன்தான் முருகப்பெருமான்.


அத்தகை  வாய்ப்பினை மனித வர்க்கம் அறியாமல்  மும்மலக் குற்றத்தின்  வயப்பட்டு முன் வினை பாவங்கள் உந்தித் தள்ள காமமெனும் நரகக்குழியில் வீழ்ந்து பெற வேண்டிய பெரும் பேற்றை பெறாமல் வீணில் வாழ்வை  வீணாக்குகின்றோம் என்பதையும் உணரலாம்.


எல்லாம் வல்ல தெய்வம் எம்பெருமான் முருகன் அருளினால் அவனது  திருவடியைப் பற்றி மனமுருகி பூசித்தும் உயிர்க்கொலை தவிர்த்தும், புலால்  மறுத்தும் சைவ உணவை மேற்கொண்டும் மாதம் ஒருவருக்கேனும் பசித்த  ஏழைகளுக்கு பசியாற்றிவித்தும் தினம் தினம் மறவாமல் காலையில் ஒரு  பத்து நிமிடமும் மாலையில் ஒரு பத்து நிமிடமும் முடிந்தால் இரவு பத்து  நிமிடமும், முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி, ஓம் முருகப்பெருமான்  திருவடிகள் போற்றி!” என்றோ ஓம் சரவண பவஎன்றோ ஓம் சரவண  ஜோதியே நமோ நம!” என்றோ முருகனது திருமந்திரங்களை நாமஜெபமாக  சொல்லி சொல்லி அவனது அருளைப் பெற வேண்டும்.


எல்லாம் வல்ல முருகனது அருளைப் பெறாமல் எந்த விதத்திலும் நாம் ஞானத்துறையில் அணுவளவும் முன்னேற முடியாது என்பதையும் உணரலாம்,  உணர்ந்ததும் முருகனது திருவடிகளிலேஎன் உள்ளம், உடல், பொருள், ஆவி  அனைத்தும் முருகா உனது திருவடிக்கே அர்ப்பணிக்கிறேன்.



பாவியாகிய  எனது அர்ப்பணிப்பையும் ஏற்று உமது தொண்டருள் ஒருவராய் எம்மையும்  ஏற்று அருள் செய்வாய் ஐயனேஎன்றும், எல்லாம் வல்ல முருகா எம்பெருமானே! தாயினும் தயவுடை தனிப்பெருங்கருணையே! தயாநிதியே!  தேவாதிதேவா! தேனே! தெள்ளமுதே! தெவிட்டா பேரின்பமே! என்றெல்லாம்  அவனது பெருமைகளை கூறி கூறி அவனது அன்பை பெற்று அவனது  பொன்னார் திருவடிகளே சரணாகதி என்றடைந்து சரணாகதி பெறுதல் வேண்டும்.


தாயினும் மேலான தயவுடை தெய்வமே முருகா! உனது அருளையெல்லாம்  நான் முழுமையாக பெறவேண்டும். அதற்கு நீரே அருள் செய்திட  வேண்டுமென்றே சகமார்க்க உரிமையினால் முருகனிடத்து வேண்டுகோள்  வைப்பதுடன் நீ நானாக வேண்டும், நான் நீயாக வேண்டும் என்று, எல்லாம்  அவனாக ஆக வேண்டுமென்றும் உயர்நிலை வேண்டுகோளை தவறாது  மனமுருகி முருகனது திருவடிகளே சமர்ப்பித்து தவறாது நாத்தழும்பேற  பூசித்து பூசித்து தொடர்ந்து வரவர முருகன் அருள் கூடி பலகாலம்  படிப்படியாய் ஞானம் நம்முள் தோன்றி ஒரு கால பரியந்தத்தில் நாமும் நம்  நாயகன் முருகனும் ஒன்றாகுதல் கூடும் என்பதையும் உணரலாம்.


 களைய முடியா கலியுக களையை
 களைவான் கந்தன் கருணை கொண்டே.

Thursday, 10 October 2019

தமிழ் ஞானமொழி


முருகப்பெருமான் துணை


மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்


முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....


முருகனே தமிழை உருவாக்கியவன், முருகனே ஞானத்தையும்  உண்டாக்கியவன், முருகனே அனைத்து கலைகளுக்கும் தலைவன், தமிழே  ஞான மொழி, தமிழ் கற்றால்தான் ஞானம் பெற முடியும் எனும் சிறப்பறிவை பெறலாம்.

உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம்தான். ஆனால் அதைவிட பாவம் எதுவெனில் தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்வது.  அதனினும் பெரும் பாவம் எதுவெனில் ஞானம் அளிக்கும் தமிழ் கற்றும்  தமிழனாக பிறந்தும் தமிழ் தலைவன் முருகனைப் பற்றி அறியாதிருப்பது  பெரும் பாவமாகும் என்பதை அறியலாம்.

தமிழ் கடவுள் முருகனே ஞானபண்டிதனாக இருப்பதையும்,  முருகப்பெருமான் திருவடி பற்றி மனமுருகி பூஜித்து வணங்க வணங்க  உயிர்க்கொலை செய்து புலால் உண்டதால்தான் நமக்கு ஞானம் தடைபட்டதை உணர்வார்கள்.

புலால் மறுத்து, சுத்த சைவ உணவை  மேற்கொண்டாலன்றி ஞானத்தில் முன்னேற முடியாது என்பதையும் அறிந்து, சைவ உணவினை மேற்கொண்டு முருகனது திருவடி பற்றி பூஜித்து எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற  நிறைந்துள்ள முருகனது ஆசிபெற மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைக்கு  பசியாற்றுவித்தும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தியும் ஆசியை  பெற்றால் ஞானம் பெறலாம் என்பதையும் அறிந்து முருகனது கருணையாலே ஞானவழிக்குரிய மார்க்கமும் அதற்குரிய தக்க துணையான  சொற்குருவையும், சற்குருவையும் முருகனருளால் பெறுவார்கள்.


சொற்குரு வழிகாட்டலினாலே சற்குருவை கண்டுகொண்டு ஞானவழிதனிலே  சென்று ஞானமும் பெறுவார்கள் என்பதை அறியலாம்.


.................
இன்பமாம் முருகனின் இணையடி போற்றிட
துன்பமும் இல்லை துணையாம் இணையடி.
தஞ்சமாம் முருகனின் தாளினை போற்றிட
வஞ்சகம் இல்லை வாழ்வும் செம்மையே.