Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 11 November 2017

உண்மை தெய்வம் முருகனே!

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....



உயிர்ப்பலியிடுகின்றதும், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் இறந்து போனவர்களையும், போரில் போரிட்டு வீரமரணமடைந்தவர்களையும், இன்னும் பல்வேறு வகையில் மனிதனாய் பிறந்து செத்துப்போன மிகச்சிறு ஆற்றல் பெற்ற மனிதர்களை வணங்குகிறதான சிறுதெய்வங்களை வணங்குதலும் அச்சிறு தெய்வங்களால் ஏதேதோ பெரிய சக்திகளை தாங்கள் அடைந்துவிட்டதாகவும், சிறுதெய்வங்கள் மிகப்பெரிய ஆற்றல் மிக்கவைகளாகவும், விளம்பரப்படுத்துதல், கோயில் கட்டுதல் போன்றவை வீண் ஆரவாரம் என்றும், அவை வீண் கற்பனைகள் என்றும், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத ஒருவன் தன்னை வணங்குவோரை எப்படி காப்பாற்றுவான் என்பதையும் தெளிவாக அறியலாம். 

மேலும் சிறுதெய்வ வழிபாட்டினால் சாதாரண பூஜை செய்பவன்கூட உயிர்ப்பலியிடுதல் என்கிற கொடும் பாவச்செயலை மீளா நரகத்தில் தள்ளக்கூடியதான பெரும் பாவச்செயலை செய்வதினால் எந்த வகையிலும் சிறுதெய்வ வழிபாடு மனிதனை முன்னேற்றாது என்றும், சிறுதெய்வ வழிபாடு உறுதியாக மனிதனை நரகத்தில்தான் தள்ளும் என்பதையும் அறியலாம்.

மனிதனாய் பிறந்தவன், தான் கற்ற ஏட்டுக் கல்வியின் பயனால் பெரிய விஞ்ஞானியாக இருக்கலாம், பெரிய அறிவாளியாக இருக்கலாம், பெரிய தொழில் அதிபனாக இருக்கலாம், ஏன் இன்னும் அநேகம் அநேகம் திறமை உடையவராய் கூட இருக்கலாம். ஆனால் முருகனை வணங்காதவர்களுடைய அறிவு பொய்யறிவு, அவனது செல்வமும் அழியக்கூடிய செல்வமே. 

அதுவும் தமிழனாய் பிறந்தும் ஒருவன் முருகப்பெருமானை குருவாய் தெய்வமாய் ஏற்று வணங்காமல் பல்வேறு தெய்வங்களை வணங்குவதும் அல்லது தெய்வ நம்பிக்கையே இல்லாமல் இருப்பதும் வேதனைக்குரியது. தமிழ் கடவுள் முருகனை அறியாது வாழ்வோர், கடைத்தேற வழியிருந்தும், கண்ணிருந்தும் கண்மூடி ஆழ்கிணற்றில் வீழும் குருடரைப் போல, பாழும் நரகில் வீழ்ந்து தொடர்பிறவிகளுக்கும் ஆளாகும் கொடுமையை எண்ணி வருந்துவார் முருகப்பெருமானை வணங்கினோரெல்லாம்.


முருகப்பெருமானை வணங்குவோம்! உண்மை மெய்ஞானம் பெறுவோம்!



மரணமிலாப் பெருவாழ்வை தரும் வல்லமை முருகனுக்கே உண்டு!

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....



தன்னை காத்துக் கொள்ள சிலர் உடற்பயிற்சிகள் செய்வார்கள், உடம்பை பாதுகாக்க உடற்பயிற்சி தேவைதான். ஆனால் உயிர் பாதுகாப்பை எவ்வாறு பெறுவார்கள்?  உடம்பு எவ்வளவு வலிவுடையதாய் இருப்பினும் உயிரில்லையேல் வலிவுள்ள உடம்பிற்கு மதிப்பில்லை என்பதை உணரமாட்டார்கள். தனது வாழ்வு வளம்பெற பொருளீட்டுவார்கள், உயிர் பலம் பெற என்ன செய்தார் என்றால் ஒன்றுமில்லை. 


இப்படி அழியக்கூடிய உடம்பிற்காக எத்தனை எத்தனை பாதுகாப்பு, அலங்காரம், ஆராதனை, பொருள் சேமிப்பு என வாழ்நாளை வீணாக்குவதைவிட எல்லாம்வல்ல காக்கும் தெய்வம் முருகன் திருவடிகளை மனமுருகி வணங்க வணங்க முருகனருளால் அனைத்தும் கை கூடி உடல் பலம், உயிர் பலம், செல்வ பலம் என அனைத்தும் பெற்று மனோபலத்துடன் மகிழ்வுடன் வாழலாம் என்பதை அறியாமல் வீணாக மாயையுள் ஆட்பட்டு வாழ்வை கழிக்கின்றதை உணரலாம்.


முருகனை வணங்க வணங்க அழியும் உடலை பயிற்சிகளாலோ, பணத்தாலோ, மருந்துகளாலோ முற்றிலும் காக்க முடியாது என்றும், அழிவற்ற ஒளிதேகம் பெற்ற முருகப்பெருமானால்தான் நாம் பெற்ற அழியும் இத்தேகத்தை அழியாத தேகமாக மாற்றி தரமுடியும் என்பதையும், கூடிப்பிரியும் உடலையும் உயிரையும், என்றும் பிரியாத உடலும் உயிரும் ஒன்றென கலந்து மரணமிலாப் பெருவாழ்வு பெற்ற ஒளிதேகமாகவும் மாற்றும் வல்லமை முருகனுக்கே உண்டு என்பதையும் அறியலாம். என்றும் பிறவா நிலையான மரணமிலாப் பெருவாழ்வை பெறுவதே பிறவியின் நோக்கம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.


ஞானக்கல்வி கற்க தமிழைக் கற்க வேண்டும்

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....



இவ்வுலகினில் கல்வி கற்றோர் ஏராளமாய் இருந்தபோதும் அவர்களது கல்வி வெறும் ஏட்டுக்கல்வியாகவே அதாவது வாழ்வியல் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கல்வியாகவே உள்ளது. அது ஒருவகை திறமை. ஆயினும் அது நமக்கு வர இருக்கும் துன்பத்தையோ, வினையையோ, மரணத்தையோ தடுக்க இயலாத கல்வியாகும்.



அகத்தீசனை மனமுருகி பூஜிக்க பூஜிக்க இந்த ஏட்டு கல்வியை பல்காலம் பயின்று கல்வி கற்றவன் என பெருமிதம் கொள்ளும் மாயையிலிருந்து முதலில் விடுபட வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். சரி உண்மையான கல்வி எது, அது தன்னையும் தலைவனையும் அறிகின்ற கல்வியாகும். அதுவே ஞானக்கல்வியாகும். ஞானக்கல்வி கற்க, தமிழைக் கற்க வேண்டும்.


தமிழ் கற்றவர்கள் ஞானத்துறைக்கு வர விரும்பி ஞானநூல்களையும் படிப்பார்கள். ஏராளமாய் திருக்குறள், திருவாசகம், தேவாரம், திருஅருட்பா, திருமந்திரம், சித்தர் பாடல்கள் என பலப்பல நூல்களை படிப்பார்கள், மனப்பாடம் செய்வார்கள். ஆனால் எத்தனை எத்தனை ஞானநூல்களை கற்றாலும் அதன் உட்பொருளை அறியாது பேசுவார்கள். சரி ஞானிகள் ஆசியாலும், முன்ஜென்ம வாசனையாலும் ஞானநூல்களை கற்றாலும் சிலபேர் அதன் பொருளை அறிய முற்பட்டு சிறிது வெற்றியும் பெறுவார்கள். நூலின், கவிகளின் பொருள் புரிந்தாலும் ஞானிகள் கூறியபடி நடந்திட மாட்டார்கள்.


அதாவது நூல் கூறும் கருத்தின்படி நடக்க இயலாமல் தடுமாறுவார்கள். சிலர் கடைப்பிடிக்க முயற்சி செய்தாலும் அவர்களால் முடியாது. இப்படி ஞான நூல்களை படிப்பதில்லை, படித்தாலும் புரியாது, படித்தது புரிந்தாலும், கடைப்பிடிக்க முடியாது, கடைப்பிடிக்க துவங்கினாலும் முழுதுமாக செல்ல முடியாது.


இதற்கெல்லாம் என்ன காரணம் எனில் பக்தியும் புண்ணிய பலமும் இல்லாமையே என்பதை உணர்வார்கள். தயவே வடிவான தயாநிதி தனிப்பெருங்கருணை வடிவான முருகப்பெருமானின் ஆசியை பெறாததால் தான், ஞானிகள் கூறியதை படிக்கவோ, அறியவோ கடைப்பிடிக்கவோ முடியவில்லை என்பதையும் அறிவார்கள்.


சரி தயவே வடிவான முருகனது தயவை பெற என்ன செய்ய வேண்டுமென்று அகத்தீசனை மனமுருகி  பூஜிக்க பூஜிக்க அன்பர்தம் மனதினுள் அகத்தியர் தோன்றி தயவே வடிவான முருகனது தயவை பெற இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளிடத்தும் குறிப்பாக ஆறறிவு உடைய மனித குலத்திற்கு தொண்டு செய்தால்தான் முருகன் ஆசியை பெற முடியும் என்பதை உணர்த்துவார்.


பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு எவர் மனமிரங்கி உதவிட முன்வருகிறார்களோ அவர்கட்கே  தலைவனும் அவர்தம் மனதினுள் இறங்கி தயவினை ஊட்டி அவர்மீது தயவு காட்டுவார் என்பதையும் அறியலாம்.


எவரை உலக உயிர்களெல்லாம் வாழ்த்துகிறதோ அவர்க்கே அவர் கற்ற கல்வியும், ஞானமும், அறிவும்  சிறப்பாய் செயல்பட்டு மயக்கமற்ற உண்மை ஞானம் புலப்பட்டு அனைத்தும் அறியும் வல்லமையையும் பெற்று கடைப்பிடிக்கும் ஆற்றலையும் வாய்ப்பையும் உதவிகளையும் பெற்று ஞானநூல்களில் கூறியவற்றை அறிந்து, தெளிந்து, கடைப்பிடித்து, கற்று, தேர்ந்து வெற்றியும் காண்பார்கள் என்பதையும் தயவிலாதோர் வெறும் நூலறிவினால் செய்யும் முயற்சி வீணில் கழிந்து தோல்வியையே தழுவுவதோடு, மரணத்தையும், நரகத்தையும் பரிசாகக் கூட தந்துவிடும் என்பதையும் அறியலாம்.


அரிய ஞானநூல்களை கற்கவும், அறியவும், பின்பற்றவும் கடைத்தேறவும் வாய்ப்புகள் கிடைக்கும். இவற்றிற்கு அடிப்படையாய் உள்ள புண்ணிய பலத்தை சேர்க்கவும், தயவினை பெருக்கி தயவுடையோனாய் ஆகிடவும், தயவுடை தலைவன் ஞானத்தலைவன் முருகனது திருவடிகளை தொடர்ந்து பற்றி பூஜைகள் செய்யவும், பிற உயிர்கள் படும் துயரம் கண்டு இரங்கவும்வல்ல வல்லமைகளையும் முருகனே அருள்வான்.