Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 19 November 2016

முருக தரிசனம் பாவ விமோசனம்!

முருகா என்றால்,



வேதாகமங்களெல்லாம் ஓங்கி உயர்ந்து போற்றுகின்ற வேதநாயகன் பரப்பிரம்ம சொரூபியான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் முருகப்பெருமானே என்பதை உணரலாம். வேதங்களும், ஆகமங்களும், இதிகாசமும், புராணமும், ஞானநூல்களும், உபநிஷத்துக்களும், சாத்திரங்களும், தோத்திரங்களும், பிரபந்தங்களும் இன்னும் பலபலவாய் தோன்றிய வேதாகம நூல்கள் அனைத்தும் அந்த மறைபொருளாய் கால பரியந்தம் தனிலே வெளிப்படுத்தாது மறைக்கப்பட்ட ஆதி ஞானத்தலைவன் அந்தந்த காலத்தின் சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு நாமங்களினாலே சொல்லி அழைக்கப்பட்ட நாமங்களின் நாயகன் முருகனே என்றும் அவனே ஞானமளிப்போன் அவனே அனைத்து நாமத்திற்கும் அழைத்த அக்கணமே வந்தருள் செய்து அன்பர் குறை தீர்த்திட்டவனும் எங்கெங்கிருந்து ஏதேது வேண்டினும் அங்கங்கிருந்து அருளுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராயும் திகழ்ந்தனன் ஆதிமூல நாயகனாம் வேற்படை வேலவனாம் முருகப்பெருமானே என்றும் அறியலாம்.



ஆதலின் மனித மல அறிவின் துணை கொண்டு ஞானிகள் இயற்றிய ஞானநூல்களின் சாரங்களை நமது அறிவினால் உணர முடியாது என்றும், உணர்ந்து அந்த நூல்களில் அந்தந்த ஞானிகள் பின்வரும் திருக்கூட்ட மரபினர் அவர் சார்ந்த துறையின் தன்மையை தெரிந்து கொள்ளவே அவரவர் அனுபவத்தை ஞானானுபவத்தை எழுதி வைத்தனர் என்றும், அந்த அனுபவங்களை உணர்வால்தான் உணரமுடியுமே அன்றி வார்த்தைகளால் உணர முடியாது என்றும் அவர்கள் கண்டு இரசித்த பேரானந்த அனுபவத்தை ஞானநிலை கொண்டே நாமும் அனுபவிக்க முடியும் என்றும் உணர்ந்து ஞானமடைய ஞானிகள் திருவடியே துணையென்றும் ஞானிகள் திருவடி பற்றினாலன்றி ஞானபண்டிதனை அடைதல் இயலாது என்பதையும் உணரப்பெறுவார்கள்.



முருகா! முருகா!! முருகா!!! என்றே செபித்திட செபித்திட முருகன் அருள் கூடி அனைத்து தெய்வங்களின் பெயரினாலும் அழைத்திட்டாலும் அங்கே முன்னின்று அவரவர் விரும்பிய வடிவினிலே அருளுபவன் முருகன் தான் என்றும் அவரவர் செய்திட்ட பாவபுண்ணியத்திற்கு ஏற்பவே அவரவர் வழிபாடு இருக்கும் என்றும் அவரவரும் வினைக்கேற்ப அவர்தம் உள்ளத்து தோன்றும் சிந்தனைகள் மாறி சிலர் சிறுதெய்வ வழிபாட்டிலும், சிலர் பலியிடும் தெய்வங்களையும், சிலர் மும்மூர்த்திகளையும், சிலர் சக்தி வழிபாட்டிலும், சிலர் காளி மாரியம்மன் போன்ற தேவதைகளையும் சிலர் பல மதம் சார்ந்தும் வணங்கிடுவர் என்றும் முற்றுப்பெற்ற ஞானிகளை வணங்கி அருள்பலம் பெற்றவர் தமக்கு அருள்சோதி வடிவினனாக தோன்றி அருள்கின்றவன் அறுபடை வீடு கொண்ட ஆறுமுகனாக தோன்றி அருளி காக்கின்ற அந்த முருகனே அவரவர் வினைக்கேற்ப பன்றியாகவும், நாயாகவும், எருமையாகவும், காளியாகவும் இன்னும் பலபல வடிவினில் சிங்கமாகவும், புலியாகவும், அவரவர் பக்திக்கும் பாவவினைக்கேற்பவும் காட்சி தருகிறான்.



ஆயினும் அவனது பக்தி உண்மையாய் இருப்பின் அங்கிருந்தும் பெருந்தாயன்பினால் அவன் விரும்பிய வண்ணமே அருளுகின்றனர் முருகன்.



அற்புதமாய் ஆனந்த தரிசனம் பெற்று உயர்ஞானம்தனை பரிசாக பெற்று உயர்வடையக் கூடிய வகையிலே அழகுடை அதியற்புத சோதி வடிவினனாக தோன்றும் ஆறுமுகனை ஞானிகள் துணையிருந்தாலன்றி புண்ணிய பலம் இருந்தாலன்றி, குருவழிகாட்டல் இருந்தாலன்றி, ஞானமார்க்கம் வருகையுற்றால் அன்றி, அன்னதானம் செய்து பிறஉயிர் துன்பம் நீக்கினாலன்றி, சுத்த சைவம் கடைப்பிடித்தாலன்றி பெற இயலாது என்பது சத்தியம் என்பதையும் உணரலாம்.



சோதி வடிவுடை முருக தரிசனம் பாவவிமோசனம்! குறையுடைய சிறு தெய்வ தரிசனம் பாவபெருக்கம்! என்பதையும் முருகன் அருளால் உணரப்பெறுவார்கள்.



ஆக பன்முகம் காட்டும் முருகனை புண்ணிய பலத்தினால், அருள்பலத்தால் முற்றுப்பெற்ற ஞானிகள் உதவியுடன் முருகனை முருகனாக பார்க்க முடியாமல் போனது அவரவர் செய்திட்ட பாவமே என்றும் முருகனை பலவித கோர வடிவினனாக பார்த்து அவனது உண்மை சொரூபம் தனை அறிய ஒட்டாது தடுத்தது நாம் செய்த பாவமே என்றும் உணர்ந்து உண்மை ஞானசொரூப ஞானபண்டித முருகனை தரிசித்திட அயராது நாத்தழும்பேற முருகநாமத்தை சொல்லி சொல்லி பாவம் கழிந்து முருகதரிசனம் பெற வேண்டும் என்ற முயற்சியும் நம்முள் தோன்றும்.


தோன்றிய அம்முயற்சி முருகனருளால் முருகதரிசனம் கிடைத்திட துணை வரும். முருகா! முருகா!! என்று விடாது சொல்லி சொல்லி முருகனை நெஞ்சார நினையுங்கள்.


முருகனை முருகனாக பார்த்து மகிழ்ந்து ஞானம்தனை அவனிடத்து வரமாய் பெறுங்கள்.


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது!

முருகா என்றால்,



மும்மலக்குற்றத்திற்கு காரணமானதை அறிந்து மும்மலக் குற்றத்தை முருகன் அருளால் நீக்கி அறியாமையினின்று விடுபட்டு தெளிந்த அறிவை பெற்று நிலையற்ற தொடர்பிறவியை வென்று நிலையான மரணமில்லாப் பெருவாழ்வை பெறலாம் என்று உணர்வான்.


நாம் காணும் அனைத்தும் நிலையற்றவைதான். இந்த நிலையற்ற பொருளெல்லாம் ஒரு கால பரியந்தத்தில் அதனதன் தன்மைக்கேற்ப அழியத்தான் போகிறது என்ற உண்மையை உணர்ந்திடுவான் முருகனை போற்றும் முருகபக்தன்.


ஆயினும் நிலையற்ற எல்லா பொருள்களும் கண்டிப்பாக நிலையான ஒன்றிலிருந்துதான், தோன்றியிருக்க வேண்டும் என்றும் நிலையான ஒன்றிலிருந்து தோன்றிய அவையெல்லாம் அதனதன் தன்மைக்கேற்ப செயல், வினை வடிவமாகி பல்வேறு சூழ்நிலைக்கு ஆட்பட்டு அதனதன் சூழ்நிலைக்கேற்ப காலத்தின் மாற்றத்தினால் படிப்படியாக தோன்றியது போலவே தேய்ந்து மறைந்தும் பின் தோன்றுகின்றன என்பதையும்  அறிகின்றான்.



முருகா! முருகா! முருகா! என்றே சிந்தையெல்லாம் முருகனின் திருநாமம்தனை ஏற்றி தொழுது தொழுது வழிபட வழிபட தோற்ற இரகசியமும் அவனுள்ளே முருகனே தோன்றி உணர்த்திட அறியப்பெறுவான்.


எது என்றும் அழிவில்லாத பொருளாய் இருக்கின்றதோ அதுவே நிலையானது என்றும், அதுவே பரம்பொருள் என்றும் அறிகின்றான். நிலையான அந்த பொருள் சிற்றணுவாகிறது, சிற்றணுவாகிய அதுவே ஆன்மா என்றே பெயர் பெற்று பரம்பொருளாய் ஆதி வஸ்துவினின்று பிரிந்திட அது தனக்கென்று ஒரு அணுக்கூட்டத்தை தனது கவர்ச்சியினால் தோற்றுவிக்கிறது. நிலையான அந்த ஆன்மா நிலையற்ற அணுக்களால் ஆன ஒரு கூட்டினை தனது ஈர்ப்பினால் கட்டுகிறது. அதற்கு உண்டான அனைத்து கட்டளைகளும் அந்த ஆன்மாவின் உள்ளேயே புதைந்துள்ளது என்பது இதுவரை யாரும் அறியமுடியாத அறிவிற்கும் எட்டாததொரு மிக பிரம்மாண்டமான சூட்சுமமாகும்.


அப்படி தோன்றிய ஆன்மாவானது மீண்டும் மீண்டும் தோன்றுகின்ற கூட்டினை ஸ்திரப்படுத்தி தம்மோடு அந்த கூட்டினை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள முடியாமல் அந்தந்த தேர்ந்தெடுத்த உருவாக்கிய கூட்டின் தன்மைக்கேற்ப கால வித்தியாசங்களில் ஆன்மாவிற்கும் கூட்டிற்கும் உள்ள தொடர்பு அறுபட்டு போவதால் கூட்டைவிட்டு ஆன்மா பிரிகிறது. ஆன்மா பிரிந்த உடனே அதுவரை ஆன்மாவால் ஈர்த்து வைக்கப்பட்ட அந்த கூடு ஈர்ப்பு மையம் விலகியதால் நெறிப்படுத்தும் கட்டளை கேந்திரம் விலகியதால் ஒன்றுடன் ஒன்று இணைய இயலாத அணுக்களெல்லாம் அவைஅவை பிரிந்து பிரிந்து எங்கிருந்து கூடியதோ அங்கேயே பிரிந்து செல்கின்றன.


இப்படி ஆன்மா பரமாணுவினின்று தோன்றி தனக்கென இதுவரை ஒரு கூடு கிடைக்காமல் அலைந்து அலைந்து பல்வேறு கூடுகளிலே கட்டி தஞ்சம் புகுகிறது. ஆனால் எங்கும் நிரந்திர கூடு கிடைக்கவில்லை என்பதையும் ஒரேஒரு அணுத்திரளில் மட்டுமே ஒரே ஒரு அணுக் கூட்டமைப்பில் மட்டுமே ஆன்மாவும் அந்த அணுக்கூட்டமைப்பின் அணுக்களும் ஒன்று கூடுவதற்கான வாய்ப்பை உள்ளதை உணர்கிறது. அந்த கூட்டமைப்பே மனித தேகம் என்ற பெயர் பெற்றது.


இப்படி இயக்கமற்ற ஒன்றிலிருந்து தோன்றிய ஆன்மாதான், பல்லாயிரங்கோடி ஆண்டுகளாக எடுத்த பலப்பல தேகத்தின் செயல்பாட்டினால் அது அத்தேகத்தின் வாயிலாய் தோன்றி செயல் பதிவுகளையும் (வினைப்பதிவு) தன்னுடனே எடுத்து செல்வதால் அடுத்த அணுக்கூட்டமான தேகத்தை அமைத்திட சார்ந்திடும்போது அந்த ஆன்மா பெற்ற வினைப்பதிவும் தேக அணுக்களை சார்ந்து தேகத்தின் அணுக்களிலும் தன்வினைப்பதிவை
பதிப்பதால் எக்காலத்தும் அணுக்கூட்டமும் ஆன்மாவும் ஒன்றிணைய வாய்ப்பே இல்லாமல் போகிறது.


ஆன்மாவின் செயல்களால் பிற ஆன்மாக்கள் பட்ட துன்பங்களினால் பிற ஆன்மாக்களிலிருந்து வெளிப்பட்ட பதிவுகளெல்லாம் இந்த ஆன்மாவை தாக்குவதால் பதிவுகளில் குற்றம் ஏற்பட்டு ஆன்மாவை மாசுள்ளதாக்கி தொடர்ந்து தொடர்ந்து வருவதினாலே ஆன்மா மும்மலக்குற்றம் எனும் சிறையினுள் அகப்பட்டு மீள முடியாமல் தவிக்கிறது. அதுவே ஒரு தேகத்தினோடு ஆன்மா இரண்டற கலக்க முடியாமல் அறியாமையில் மூழ்கி, கலக்க வழி தெரியாது தடுமாறுகின்றது.


இப்படி தடுமாறுகின்ற ஆன்மாக்கள் முற்றுப்பெறுவதற்கான இரண்டற கலப்பதற்கான ஏதுவான மனிததேகத்தினுள் பிரவேசித்து அந்த அணுதிரள்களிலே அணுவுக்கு அணுவாய் கலந்துள்ள மும்மலக் கசடை நீக்கிட ஒரு உபாயம்தனை அற்புதமான வேதியியல்தனை அதிசூட்சா சூட்சுமம் மிக்கதொரு வழிமுறையை கண்டு பிடித்து சேராத தேகத்தை ஆன்மாவுடன் சேர்த்து வெற்றி கண்டான் ஆதித்தலைவன் முருகப்பெருமான் என்பதையும் முழுதும் தன் அறிவினால் உணர்கிறான் முருகனின் ஆசி பெற்ற முருகபக்தன்.



பிறஉயிர்களுக்கு செய்திட்ட தீயசெயல்களே வினைப்பதிவுகளாக மாறி, நிலையான ஆன்மாவில் பதிந்திட அந்த ஆன்மா மாசுபடுகிறது. அதனால் மாசு மிகுந்த தேகமே அமைகிறது. ஆதலின் மாசுபட்ட ஆன்மாவை சுத்தி செய்தால் தேகமும் சுத்தியாகும் என்பதை உணர்த்திடுவான் ஆதிதலைவன் முருகப்பெருமான்.


ஆதலின் பிற உயிர்களுக்கு செய்திட்ட துன்பங்கள் பாவினைகளாக பதிந்திட, பிறஉயிர்களுக்கு செய்கின்ற உபகாரம் தூயவினைகளாக நற்பதிவுகளாக பதியும் நற்பதிவுகள் எல்லாம் ஒன்று கூடிட ஜீவதயவினால் ஆனதொரு சாவி, அந்த ஆன்மாவிற்குள் கிடைத்திடும் ஆன்மகுற்றம் நீங்க நீங்க அந்த ஜீவர்கள் வாழ்த்துகின்ற வாழ்த்து எனும் இயற்கை சார்ந்த அடிப்படை நல்வினை பதிவுகளெல்லாம் நல்ல செயல்செய்யும் ஆன்மாவினை சாரச்சார ஆன்ம ஒளி பெற்று அதன் விளைவாய் அது பெற்ற தேகத்தினிலே அணுக்களை சேர ஒட்டாது தடுக்கின்ற மும்மலக்குற்றமெனும் கசடை நீக்கவல்ல ஒரு சாவியை, அதாவது அடிப்படை பதிவுகளை வெளிக் கொணர்கிறது.


ஒன்று கூடாத அணுத்திரளை ஆன்மாவுடன் ஒன்று கூட்டிட ஏற்கனவே ஒன்று கூடிட்ட ஆன்மா ஒன்றினது வழி நடத்தல் அவசியமாகிறது. அதன் மூலப்பிரதி தேவைப்படுகிறது. அதுவே ஞானிகளின் ஆன்மாவாகும். அதுவே முற்றுப்பெற்றவர் தம் ஆன்மாவாகும். அந்த முற்றுப்பெற்ற ஞானிகளின் வழி நடத்துதலினாலே இந்த ஆன்மா சேராத அணுக் கூட்டத்தினின்று எப்படி கசடை நீக்குவது என்று கற்றுத்தெளிந்து படிப்படியாக படிப்படியாக பல்லாயிரமாண்டு சுமார் 27,000 வருடங்களாக பாடுபட்டு பாடுபட்டு மீள்வினைக்கு ஆளாகாமல் ஞானிகள் துணையுடன் வந்து வந்து தேக அணுக்கூட்டத்தில் உள்ள கசடை நீக்கி நீக்கி தூய்மையான அணுக்களால் கூடிய சுத்த தேகம்தனை இறுதியில் பெறுகிறது.


பின்னரே ஞானத்தலைவன் ஆறுமுகனார் ஒளி பொருந்திய அந்த பேரான்மா முன்னிலையிலே ஞானிகள் ஆன்மாக்களெல்லாம் ஒன்றுகூடி நிற்க, இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மாவினுள் பரமானந்த நிலைநிற்கும் ஆறுமுகனார் ஆன்மாவின் உட்பிரவேசத்தினால் ஆன்ம சுத்தி பெற்று அந்த ஆன்மா பெற்ற தேகக்கசடை முருகன் நீக்குவான்.


ஆறுமுகனார் தேகக்கசடை ஜீவகாருண்யமாகிய ஜீவதயவு எனும் பிற உயிர்கள் நமக்களிக்கின்ற மகிழ்வின் கூறுகளாய் ஆன நல்வினை பதிவுகளைக் கொண்டே இந்த கசடான தேகத்தை தூய்மைப்படுத்துவதினால் முதலில் களங்கப்பட்ட ஆன்மாவை சதா ஜீவதயவின் பெருக்கத்தை அளவிறந்து பெறுதற்காக ஏராளமான புண்ணியங்களை மிகுந்து செய்திட தூண்டி பிற உயிர்களின் ஆசிகளை பெறச்செய்து பெறச்செய்து ஞானவீட்டிற்கான திறவுகோலை பெற்றுத் தருவான் ஞானபண்டிதன்.


முருகா! முருகா! முருகா! முருகா! முருகா! முருகா! என்றே அயராது நாத்தழும்பேற நாமம்தனை சொல்லி சொல்லி ஜீவதயவின் சிகரம், ஆதிமூல தலைவன் முருகன் ஆசி பெறப்பெற ஜீவதயவுடை முருகன் அவன் தம்முள்ளே ஜீவதயவாகிய ஞானவீட்டின் திறவுகோல் கொண்டு ஞானமடையச் செய்து ஆன்மா சுத்தி பெறச் செய்து ஒரு சிறப்பான தனித்தன்மையுடைய வேதியியலால் இணையாத அணுக்கூட்டத்தை குற்றம் நீக்கி இணைத்திட துணைபுரிந்து இணைத்து ஆன்மாவை விட்டு மீண்டும் பிரியாத வகையிலே ஒன்று கூட்டி தருவான் ஞானபண்டிதன்.


ஜீவதயவின் அருள் கூடவே ஞானபண்டிதன் அருளைப் பெற்று அந்த ஆன்மாவும் ஆன்மாவிற்கு உண்டான அணுத்திரள் கூட்டமைப்பாம் தேகமும் ஒன்றென கலந்து ஆன்மா எந்த ஆதிவஸ்துவினின்று தோன்றியதோ அதைப் போன்றே பஞ்சபூதத்தினால் பெறப்பட்ட அணுத்திரள் கூட்டமான தூலதேகமும் அகதேகமாக அணுதேகமாக ஒளிதேகமாக மாறி ஆன்மாவைப் போன்றே அதுவும் ஆகினபடியால் அது மீண்டும் எக்காலத்தும் ஆன்மாவை விட்டு பிரியாது, தோன்றிய பஞ்சபூதத்தின் தன்மைக்கு அப்பாற்பட்டும் பஞ்சபூதத்துவினின்று விடுபட்டு ஆதி வஸ்துவாய் மாறுகின்றபடியாலே ஆன்மா தேகம் விட்டு பிரிதலான மரணம் என்ற ஒன்று அந்த ஆன்மாவிற்கோ அது பெற்ற உடலிற்கோ ஏற்படாமல் அந்த ஆன்மா என்றுமே அழியாத ஆன்மாவை விட்டு பிரியாத மரணமில்லா தேகத்தைப் பெற்று மரணமில்லாப் பெருவாழ்வை ஜீவதயவினால் மட்டுமே இறுதியில் அடைகிறது.


இப்படி ஆன்மா மரணமில்லாப் பெருவாழ்வை பெறுவதற்கு அதற்கு சாவியாக இருப்பதும் தேகக்கசடை நீக்க பயன்படுவதும் ஜீவதயவு எனும் ஜீவர்கள்பால் செலுத்துகின்ற பரிவே காரணமாய் இருப்பதினாலே அந்த ஜீவதயவே இறுதியில் மரணமில்லாப் பெருவாழ்வாக தூயதேகமாக ஆதிமூல வஸ்துவிற்கு அடிப்படையாக இருப்பதையும் அறிவான் முருகபக்தன்.



அறிய அறிய, தெளிய தெளிய முருகன்மீது பக்தி கூடி கூடி அந்த ஜீவதயவு என்பதே முருகனின் அருளாய் வெளிப்படுகிறது என்பதையும் உணர்வான் ஜீவதயவின் வடிவமே முருகன் என்றும் முருகனின் வடிவமே ஜீவதயவு என்றும் ஜீவதயவின் பேராற்றலே அருட்பெருஞ்சோதியாய் தோன்றுகிறது என்பதையும் உணர்ந்து ஜீவதயவைப் பெருக்கி கடைத்தேறுவான் முருகபக்தன்.


வேலனை போற்றுவோம்
காலனை வெல்லுவோம்.

-சுபம்-
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Thursday, 10 November 2016

நாம் செய்த பாவங்கள்தான் நமக்கு துன்பங்களாக மாறி நம்மை தாக்குகின்றது!

முருகனை வணங்கிட :


காமத்தினால் பல ஜென்மங்களிலே நாம் பலபெண்களை கெடுத்த பாவங்களையும், கற்பழித்த பாவங்களையும், தூயநெறி நடக்கும் கற்புடைய பெண்களை கெடுத்த பாவங்களையும், கோபத்தால் பல உயிர்களுக்கு நாம் செய்த பாவங்களையும், பொறாமையால் பலருடைய வாழ்வை கெடுத்ததால் உண்டான பாவங்களையும், பேராசையால் பிறர் சொத்தை அபகரித்ததினால் உண்டான பாவங்களையும், மற்றவர்மீது புறஞ்சொல்லி பிறர் வாழ்க்கையை கெடுத்ததினால் உண்டான பாவங்களையும், செய்நன்றி மறந்ததால் உண்டான பாவங்களையும், உதவி செய்தோருக்கே இடையூறு செய்த கொடும் பாவத்தினால் உண்டான பாவங்களையும் உயிர்க்கொலை செய்ததினால் உண்டான பாவங்களையும் உணரச் செய்து அந்த பாவவினைகள்தான் இச்சென்மத்திலே நம்மை நோயாக, வறுமையாக, பகையாக, பல்வேறு வகையான பிரச்சனையாக இப்போது நம் வாழ்விலே குறுக்கிடுகிறது என்பதையும் உணரச்செய்தும், இப்படி நாம் செய்த பாவங்கள்தான் நமக்கு துன்பங்களாக மாறி நம்மை தாக்குகின்றது என்பதை முருகனை வணங்க உணர்ந்து இவையாவும் நாம் செய்ததினால் வந்ததுதான் என்பதையும் இப்பாவ வினைகளிலிருந்து நாம் மீண்டு வரவேண்டுமே அன்றி பாவங்களின் போக்கிலே போகாது அவற்றை ஏற்று அனுபவிக்க வேண்டுமே அன்றி பாவத்தினால் உந்தப்பட்டு மேலும் மேலும் பாவியாகாது நம்மை காத்துக் கொள்ள முருகன் திருவடியே துணை என்பதையும் உணர்ந்து முருகனது திருவடியை தீவிரமாக பற்றி பூஜிப்பான்.


முருகனது திருவடியை பூஜிக்க பூஜிக்க பூஜிக்க பாவவினைகளின் தன்மையை ஆழமாக உணர்வான். நாம் செய்த பாவங்கள் நம்மை மேலும் மேலும் பாவங்களை செய்யத் தூண்டி நம்மை நரகத்தில் தள்ளி எடுத்த இந்த அற்புதமான மானுட பிறப்பினின்று இழிநிலை பிறப்புகளை உண்டாக்கிவிடும் என்றும், பாவம் மிகுதியாக மிகுதியாக நாம் நாயாக, பன்றியாக, சொறிபிடித்த நாயாக, நொண்டி பன்றியாக, கழுதையாக, பாம்பாக மாறிமாறி நமது பாவவினை நம்மை பிறக்கச் செய்து இறுதியில் மலத்தில் நெளியும் புழுவாகவும் பிறக்கச் செய்துவிடும் என்பதையும் உணர்ந்து பாவத்தினால் வருகின்ற துன்பங்களை ஏற்றுக் கொள்வான் முருகபக்தன்.



முருகனை வணங்கா விட்டால் இந்த பாவங்கள் நம்மை சூழ சூழ பாவபுண்ணியத்தின் மீது நம்பிக்கை இல்லாதுபோய் பலவிதமான இழிபிறவிக்கு ஆளாவோம் என்பதை தெளிவாக உணர்ந்து முருகனை மேலும் மேலும் வணங்கிட, செய்த பாவவினைகள் செய்தவைதான், செய்த பாவங்களுக்கு மன்னிப்பு என்பது இறைவனிடத்தும் இல்லை, இயற்கையிடத்தும் இல்லை. நாம் செய்தவை நமக்கு அப்படியே திரும்பித்தான் வரும் என்பதையும் முருகன் அருளால் பாவவினைகளின் வேகத்தை குறைத்து மெதுமெதுவாக முருகன் அருள் துணையால் அனுபவித்து நீக்கி கொண்டும், முருகனருளால் மேலும் பாவங்களை செய்யாதிருக்க முருகன் துணையுடன் தானதருமங்களைச் செய்தும் தனது ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்றும் உணர்வான்.



நாம் செய்த பாவங்கள் நம்மை நோயாக தாக்கும்போது நாம் வணங்கிய முருகன் நமக்கு மருந்துவனாக வருவதையும், நோய் நீங்க மருந்தாகவும் அவனே வருவதையும், நோய் நீக்க தேவையான பொருளாக அவனே வருவதையும் தெள்ளத்தெளிவாக உணர்வதோடு பாவத்தின் தீவிரம் முருகன் அருளால் கடுகி விரைந்து குறைவதையும் காண்பான் முருகபக்தன்.


பாவத்தை உணரச்செய்வதும் முருகனின் கருணையே!
பாவத்தை அனுபவிக்க செய்வதும் முருகனின் கருணையே!
பாவத்தை அனுபவிக்க துணையாய் இருந்து காப்பதும் முருகனின் கருணையே!


ஆதலில் அருள்நிறை கருணையே வடிவான காத்தருள் புரிகின்ற எல்லாம்வல்ல இறைவனாம் முருகப்பெருமானின் திருவடிகளை மனம் உருகி பயபக்தியுடன், “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!!” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம!” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ முருகனது திருநாமங்களை தொடர்ந்து சொல்லி சொல்லி மந்திர உரு செய்ய செய்ய முருகப்பெருமான் நம்மை சார்ந்து நமது பாவங்களான உயிர்க்கொலை செய்து புலால் உண்கின்ற பழக்கத்திலிருந்து முதலில் விடுவிக்கின்றான்.


முன்செய்த பாவங்களிலிருந்து மீள, நம்மை புண்ணியவானாக்கும் பொருட்டு வணங்கினோர்க்கு தேவையான பொருளாதாரத்தை கொடுத்து ஏழை எளியோர்க்கு அன்னதானங்கள் செய்ய தூண்டி அன்னதானங்களை செய்ய செய்து புண்ணியவானாக மாற்றி மேல்நிலையை அடையச் செய்கின்றான். ஜீவதயவினை உணரச் செய்து நம்மை ஜீவதயவுடையோராக ஆக்கி தூயநெறியிலே நடந்திடச் செய்து நம்மை பெரும் புண்ணியவான்களாக ஆக்கி இறுதியில் மரணமிலாப் பெருவாழ்வு என்கிற பெறுதற்கரிய பெரும் பேற்றினையும் தந்தருளி நம்மையும் அவனைப் போலவே ஆக்கிக் கொள்கின்றான் முருகப்பெருமான் எனும் பெருங்கருணை தாய்.
...................

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்